ADVERTISEMENT

புதுச்சேரி : சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் முக்கிய விவாதங்கள், தீர்மானங்கள்!

01:06 PM Sep 07, 2019 | kirubahar@nakk…

2019-20ஆம் ஆண்டிற்கான புதுச்சேரியின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் காலை, மாலை என மாறி மாறி நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பூஜ்ய நேரத்தின் போது எம்.எல்.ஏக்களின் கேள்விக்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு' தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி அதனை ஏற்கலாமா என்பது பற்று முடிவு செய்யப்படும் என்றார்.

அதேசமயம் இலவச அரிசி வழங்கப்படாத பிரச்சனை இரண்டு நாட்களாக தொடர்ந்து சட்டசபையில் எழுப்பப்பட்டது. அதற்கு, "இலவச அரிசி வழங்குவதற்கான டெண்டருக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து பேசலாம் என்று ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனால் ‘ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், நாங்கள் கவர்னரை சந்திக்க வரமாட்டோம். வேண்டுமானால் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவாருங்கள் ஆதரிக்கிறோம்” என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கூறினார்.

அதையடுத்து இலவச அரிசி வழங்கும் தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்து பேசுகையில், “ புதுவை அரசின் முக்கிய நலத்திட்டமான இலவச அரிசி பல்வேறு இடையூறுகளுக்கு நடுவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் தலா 20 கிலோ வழங்கப்பட்டு வந்தது. எனினும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவாக குறைத்தும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ எனவும் தொடர்ந்து வழங்க உத்தரவிடப்பட்டது. பிறகு இலவச அரிசிக்கு பதிலாக பணமாக நேரடி பணப்பரிமாற்றம் மூலம் கிலோவுக்கு ரூ.30 வழங்கும் முடிவுக்கு பின் கடந்த ஆண்டில் 5 மாதங்கள் மாதத்துக்கு சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.600-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டது. பெருவாரியான மக்கள் இலவச அரிசி வழங்கவேண்டும் என்று தெரிவித்ததால் அரிசி தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அரிசி வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.

மேலும் அரிசி விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் பணமாக கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும் என்ற நிலை பெரும்பாலான குடும்பங்களுக்கு ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் பணமாக வழங்குவதால் அதை அரிசிக்கு பயன்படுத்தாமல் வீண்விரயம் செய்துவிடுகிறார்கள்.

இலவச அரிசி தொடர்ந்து வழங்குவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை இலவச அரிசி வழங்க டெண்டர் கோப்பு வைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் அரிசி வழங்க முடியவில்லை. இப்பேரவையின் முன்பு தொடர்ந்து அரிசி வழங்க தீர்மானம் நிறைவேற்றுமாறு அவைமுன் வைக்கப்படுகிறது. பிராந்திய வாரியாக அரிசி வழங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையை அரசு எடுக்க இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது. மாநில மக்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து அரிசி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் “என்றார்.

அந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

சட்டசபை நேற்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், ‘சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்து 14 நாட்கள் ஆகிறது. நாளையுடன் ( இன்று) சட்டசபை முடிகிறது. அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கிறதா? அது எடுத்துக் கொள்ளப்பட்டதா? இல்லையா? சிறப்பு சட்டப்பேரவை கூட்டி முடிவு செய்ய போகிறீர்களா? என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி, ‘சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரை யாரும் வலியுறுத்த முடியாது’ என்றார்.

சபாநாயகர் சிவக்கொழுந்தும், ‘சட்டசபை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ.ஜெயபால் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஒட்டுமொத்தமாக சட்டசபையில் இருந்து வெளியேறினர்.

அதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் நேற்றோடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT