கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள ஓமக்குளம் பகுதியில் சன்முகசுந்தரம் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் மாற்றுதிறனாளிகள் தினமான டிசம்பர் 3-ந்தேதியும், பெட்ரோல் பங்க் தொடங்கிய தினமான ஜூலை 31-ந்தேதியில் மாற்றுதிறனாளிகளின் இருசக்கர வாகனங்களுக்கு ரூ100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகிறார். அந்த நாட்களில் மாற்றுதிறனாளிகள் எத்தனைபேர் வந்தாலும் அவர்களுக்கு பெட்ரோல் வழங்குகிறார்கள்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சன்முகசுந்தரம் கூறுகையில், உடலில் அனைத்து பாகங்களும் உள்ளவர்கள் வாழ்வதற்கு பல்வேறு சிரமங்கள் அடைந்து வருகிறார்கள். மாற்றுதிறனாளிகள் பல்வேறு சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் வண்டியில் பெட்ரோல் தீர்ந்துபோய் வெய்யிலில் நடுவழியில் நின்று வண்டியை தள்ளமுடியாத நிலையை அறிந்தேன். அதனால் என்னால் முடிந்தவரை மாற்றுதினாளிகள் தினத்திலும், பெட்ரோல் பங்க் தொடங்கிய நாளில் மாற்றுதிறனாளிகள் எத்தனைபேர் வந்தாலும் அவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவுசெய்தேன். அதனைதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறேன். இது தொடர்ந்து வழங்கப்படும். காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை 170 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ100 வீதம் அனைவருக்கும் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.