ADVERTISEMENT

இளம் பெண் டாக்டர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி மன்னன் கைது!

10:05 AM May 17, 2019 | tarivazhagan

ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் திருமண தகவல்கள் மூலம் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் என்றாலே நம்பிக்கை தன்மை குறைந்து வரும் நிலையில் ஆன்லைனில் வேறு வேறு பெயர்களில் பெண்களை மோடி செய்தவன் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாமல் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகே திருச்சி போலீஸ் கைது செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி, சிவில் இன்ஜினீயர். திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர், தன்னை பல் டாக்டர் என்று கூறியும், திருமணம் ஆகாதவர் என்றும் அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன், சக்ரவர்த்தி என பல பெயர்களில் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.


திருச்சி மாவட்டம் நம்பர்-1 டோல்கேட் பிச்சாண்டார் கோவில் வி.என்.நகரை சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (33). 2017ம் ஆண்டு கணவரை இழந்த இவர், புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் உள்ள உறவினர்கள் எல்லோரும் இவருக்கு அடுத்த திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். கையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரும், ஆன்லைனில் திருமண பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் (சக்கரவர்த்தி) அஜய் என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும் திருமண பதிவு செய்ததால் கீதாவிற்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஜய் முதல் திருமணம் செய்ததை மறைத்து, கீதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.

அதனை நம்பிய கீதா அவரிடம் நெருங்கி பழகினார். இந்தியா வருவதற்கு 10 இலட்சம் அவசரமாக தேவைப்படுகிறது என்று சொல்லவும் வட்டிக்கு கடனாக 10 இலட்சத்தை கொடுத்திருக்கிறார். திரும்பவும் பணம் தேவைப்படுகிறது என்று சொல்லவும் தன்னுடைய எம்.பி.பி.எஸ். மருத்துவ சான்றிதழை காண்பித்து கேட்கவும் மீண்டும் 8 இலட்சத்து 70,000 கொடுத்திருக்கிறார்.

இதன்மூலம், ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் வரை கீதாவிடம் இருந்து அஜய் பெற்றிருக்கிறார். ஆனால் திருமணம் பற்றி சக்கரவர்த்தி எதுவும் பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அஜயின் நடவடிக்கைகளில் டாக்டர் கீதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரிக்கையில், சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி டாக்டர் என்ற விவரமும் கீதாவிற்கு தெரியவந்தது. அவனுடைய பெயர் அஜய் இல்லை என்றும் சக்ரவத்தி என்கிற பெயர் தான் உண்மையான பெயர் என்றும் இவர் பொறியியல் படித்து விட்டு திருமண தகவல் மையங்களில் வேறு வேறு பெயர்களில் மருத்துவர் என்று பதிவிட்டு அதன் மூலம் பெண்களுக்கு வலைவீசி அவர்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி பணம் பறிக்கும் வேலை செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கீதா, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனை தொடர்ந்து முதல் திருமணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில், கீதா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, கிருபாகரன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் உள்ள வீட்டில் இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கார் டிரைவர் முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தியும், முருகனும் நேற்று லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி வாதாடிய, பெற்றோர் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் ஜெயந்திராணி கூறுகையில், “சக்கரவர்த்தி டாக்டருக்கு படித்ததுபோல் போலியான ஆவணங்கள் தயாரித்து உள்ளார். மேலும் அவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். பெண் டாக்டர்களை குறிவைத்தே அவர் மோசடிகளில் இறங்கி உள்ளார். இந்த வழக்கில் திருமண பதிவுகள் மோசடிக்கு சில ஆன்லைன் நிறுவனங்கள் உடந்தையாக இருந்திருப்பதால் அவற்றை முறைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளேன். இந்த வழக்கில் ஜூன் 4-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT