ADVERTISEMENT

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. மின்கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்!

05:30 PM Feb 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், வாலிபர் ஒருவர், சாலையில் தனியாகச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் அத்துமீறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனால், மிரண்டுபோன அந்த இளைஞர், தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லமுயன்றுள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட அந்த இளைஞர், போதையில் இருந்துள்ளார். அவரை பொதுமக்கள் அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதன்பிறகு, காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்துசென்ற காவல்துறை உதவிஆய்வாளர் மதிவாணன், சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை செய்துள்ளார். அதில், அவர் விவேகானந்தபுரம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலைபார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஒரு வருடமாக அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடம் இதுபோன்று நடந்துவந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து அந்த வாலிபரை மீட்ட போலீசார், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். வாலிபரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடி கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT