ADVERTISEMENT

மகன் கொலை... நாடகமாடிய பெற்றோர்...

02:06 PM May 30, 2020 | rajavel

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன். 29 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாட்டில் இருக்கும்போது சம்பாதித்த பணத்தைத் தன் தந்தை ராமசாமியிடம் கொடுக்கவில்லை என்று தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

ADVERTISEMENT


முத்தையன் தன் தாய் சரஸ்வதியுடன் பக்கத்துவீட்டில் குடியிருந்து வந்தார். அவரது தந்தை ராமசாமி சொந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு பையனுக்கும் அவரது தாய் சரஸ்வதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இவர் சண்டை போடும்போது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு முத்தையன் தந்தை ராமசாமி அங்கு வந்துள்ளார். ஏன் சரஸ்வதியிடம் தகராறு செய்கிறாய் என்று மகன் முத்தையனை தட்டிக் கேட்டுள்ளார். இதில் அப்பா மகன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

கணவர் ராமசாமியை மகன் முத்தையன் தாக்கியதைக் கண்டு கோபம் கொண்ட சரஸ்வதி, கணவருடன் சேர்ந்து கொண்டு முத்தையனை தாக்கியுள்ளனர். கணவன் மனைவி இருவரும் தாக்கியதில் கீழே விழுந்த முத்தையன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையறிந்த ராமசாமி, சரஸ்வதி இருவரும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். யாருக்கும் தெரியாமல் முத்தையன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் கூறிவிடுவது என முடிவு செய்து இறந்த முத்தையன் சடலத்தைத் தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.


இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் திட்டமிட்டபடி உறவினர்களிடம் முத்தையன் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் சொல்லியுள்ளனர். உறவினர்களும் முத்தையன் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று நம்பி அவரது உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர். ஊரிலுள்ள சிலர் விகளத்தூர் போலீசாருக்கு முத்தையன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து முத்தையன் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமசாமி சரஸ்வதி இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மகனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தாய் தந்தை இருவரும் சேர்ந்து மகனை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ள இந்தச் சம்பவம் பாண்டகப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT