ADVERTISEMENT

பெற்றோர்களை கொன்று சாக்குமூட்டையில் கட்டிய மனநோயாளி!

07:54 PM Apr 30, 2020 | Anonymous (not verified)



பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த 63 வயதுள்ள ராமசாமி, 58 வயதுள்ள செல்லம்மாள். கணவன்- மனைவியான இவர்களது மகன் 27 வயது ரமேஷ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்காக தொடர் சிகிச்சை மூலம் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி தங்கமணி என்ற மனைவியும், இரண்டு ஆண், ஒரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT


ரமேஷ் மனநிலை சரி இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்ததால், இவரது மனைவி கணவரிடம் சரிவர பேசுவது இல்லை. கணவரிடம் இருந்து ஒதுங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ் சமீபத்தில் விவசாய கிணற்றில் விழுந்து காலில் அடிபட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் ரமேஷ் மனநோய் காரணமாக குடும்பத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்த அவரது தந்தை ராமசாமி, தாய் செல்லம்மாள் ஆகிய இருவரும் நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதைக்கண்டு சந்தேகமடைந்த ரமேஷ் மனைவி தங்கமணி, மாமனார் - மாமியார் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து ஓடியுள்ளது. இதைக் கண்டு திடுக்கிட்ட தங்கமணி அக்கம்பக்கத்தினர்களிடம் சொல்ல, அவர்கள் சென்று பார்த்தபோது ராமசாமியும் அவரது மனைவி செல்லம்மாளும் சாக்குமூட்டையில் பிணமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ADVERTISEMENT


உடனடியாக பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வந்தபோது மன நோயாளியான ரமேஷ் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டு கத்தியைக் காட்டி தன்னைத் தானே வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிக் கொண்டிருந்துள்ளார். அவரை போலீசார் நயந்து பேசி கீழே கொண்டு வந்தனர். தன் தந்தை, தாயை வெட்டிக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய மனநோயாளி மகனின் கொடூர செயலை கண்டு லாடபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தாய், தந்தையை கொலை செய்த மனநோயாளி ரமேஷ் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT