ADVERTISEMENT

பயணிகள் ரயில் விடவேண்டும்... எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு!

05:04 PM Sep 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருகிறார்கள் இதில் ரயில் மூலம் பயணம் செய்பவர்களே அதிகம்.

ஈரோட்டில், 'சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் நலச் சங்கம்' என்ற அமைப்பு உள்ளது. அதன் சார்பில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியிடம் இன்று ஒரு மனு கொடுத்தனர். பிறகு, அவர்கள் கூறும்போது, "எங்களது சங்கத்தில் 1,038 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் அல்லாதவர்கள் சுமார் 2,000 பேர் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் தினமும் வேலை, வியாபாரம் விஷயமாக ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்குச் சென்று வருகிறோம்.

கரோனா வைரஸ் பாதிப்பால் சென்ற மார்ச் 24ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்தோம். ஜூன் மாதம் முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால் எங்களுக்குச் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், இப்போது எங்களின் சொந்த வாகனத்திலும், பேருந்திலும் வேலைக்குச் சென்று வருகிறோம். பேருந்தில் திருப்பூர் செல்ல 2 மணி நேரம் ஆகிறது. ரயிலில் செல்லும்போது ஒரு மணி நேரம்தான் ஆகும்.

பேருந்தில் இடைவெளி இல்லாமல் குறைந்தது 100 பயணிகள் அளவில் பயணிக்கின்றனர். இதனால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பேருந்தில் திருப்பூர் சென்றுவர, மாதத்திற்கு ரூபாய் 3 ஆயிரம் செலவாகிறது. இதுவே, ரயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்றுவர மாதத்திற்கு சீசன் டிக்கெட் மூலம் ரூ.220 மட்டுமே ஆனது. பேருந்தில் செல்வதால் எங்களுக்கு பொருளாதார இழப்பு மட்டும் அல்லாமல் கால விரயமும் ஏற்படுகிறது.

எனவே, தினசரி காலை நேரத்தில் ஈரோட்டில் இருந்து திருப்பூர்-கோவை வரையும், மாலையில் கோவையில் இருந்து ஈரோடு வரையிலும் ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் சேவை நிறுத்துவதற்கு முன்பு பலர் சீசன் டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர். ரயில் சேவை நிறுத்தியதால் அந்த சீசன் டிக்கெட் காலாவதி ஆகிவிட்டது. அதனால் அந்த சீசன் டிக்கெட்டுக்கு ரயில் சேவை தொடங்கும்போது கால நீட்டிப்பு செய்துதர வேண்டும்." என்றனர்.

ஈரோடு- கோவை ரயில்சேவையைத் மீண்டும் தொடங்க வலியுறுத்தி ரயில்வே நிர்வாகத்திடம் பேசுவதாக எம்.பி.கணேசமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT