அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழுக்கு பின் அதிமுக வட்டாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் யார்? என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அக்டோபர் 1ஆம் தேதி சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்..? என்ற போட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின்போது ஓ.பி.எஸ். ஆதரவாக ஒரு தரப்பினரும், ஈ.பி.எஸ். ஆதரவாக மற்றொரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் என்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியிலுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு செய்தார். பௌர்ணமி நாளில் முருகப் பெருமானையும், பெரியபாளையம் பவானி அம்மனையும் வேண்டி வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் கை கூடும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆஸ்தான ஜோதிடர் அளித்த ஆலோசனைப்படியே பௌர்ணமி சிறப்பு பூஜையை அவர் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தமிழகத்தின் ஈசானி மூலையான திருவள்ளூர் மாவட்டம், கவரபேட்டை அருகேயுள்ள அரியதுறை சிவன் கோவிலில் பூஜை செய்துவிட்டுதான் காரியத்தை தொடங்குவார்கள். ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் இங்கு வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.