Skip to main content

முன்னாள் முதல்வர்களின் உண்ணாவிரத வரலாறு!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், தொண்டர்கள் என மொத்த அதிமுகவும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறது (உணவு இடைவேளை உண்டு). எதிர்க்கட்சியான திமுக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு மறியலுக்கு அழைப்பு விடுத்து நடத்துகிறது. என்ன தான் முதல்வராக இருந்தாலும் அவரே அவரது ஆட்சியிலேயே மத்திய அரசை கண்டித்து, மன்னிக்கவும் கண்டிக்கவெல்லாம் மாட்டார், கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருப்பது சிறப்பான விஷயம் தான். ஆளும் கட்சியே, அதுவும் மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் சுமூகமான உறவில் இருக்கும் ஆளும் கட்சியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறதே என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். 

 

ops eps fasting



முதல்வர் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டம் என்பது இதுதான் தமிழகத்துக்கு முதல் முறையா? இல்லை, நாம் மறக்க முடியாத உண்ணாவிரதப் போராட்டங்களில் நம் முன்னாள் முதல்வர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சி செய்த மூன்று முதல்வர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, அது சினிமா. ஆனால், அவர்கள் உண்ணாவிரதம் இருந்தது வேறு வேறு காரணங்களுக்காக.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது சத்துணவுத்  திட்டம். அதற்காக அரசு கிடங்கில் இருந்த அரிசியை பயன்படுத்தும்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் இந்த விஷயத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. இந்திராகாந்திதான் அப்போதைய பிரதமர்.  சட்டமன்றத்தில் எம்ஜிஆர், "தமிழகத்தில்  அரிசி தட்டுப்பாட்டை குறைக்க, மத்திய அரசின் தானியக் கிடங்கிலிருந்து அதிக அரிசி  வழங்கக் கோரி, நாளை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்" என்றார். சொன்னதைப் போலவே மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் காலை, மதிய உணவுகளைத் தவிர்த்து போராட்டத்தில் இறங்கினார். இதனால் மேலும் கோபமடைந்தார் இந்திரா காந்தி. இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பிய சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  எம்ஜிஆரின் கோரிக்கைக்கு சம்மதிக்குமாறு அழுத்தம் கொடுக்க இந்திரா காந்தி சம்மதித்தார். மாலை ஐந்து மணிக்கு பழச்சாறு குடித்து வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் எம்ஜிஆர்.

 

mgr with indra



அண்ணா சமாதியில் எம்ஜிஆர் போராட்டத்தை நடத்தியது போல, எம்ஜிஆர் சமாதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. 1993ஆம் ஆண்டு, தமிழக முதல்வராக பொறுப்பில் இருந்துகொண்டு, மாநிலத்துக்குத் தேவையான கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பது இரண்டாவது முறையாக தமிழக அரசியல் பயணத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா நடத்திய இந்த உண்ணாவிரதத்துக்கும் இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அன்றும் இன்றும் ஒரே பிரச்சனையாக தமிழகத்துக்கு இருப்பது, கர்நாடகா காவிரி நீரை தர மறுப்பதுதான். 

 

jeya fasting



அந்த வருடத்தில், காவிரி தீர்ப்பாயம் உத்தரவிட்ட 205 டிஎம்சி நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டத்தில்  இறங்கினார். ஜெயலலிதா உண்ணாவிரதம் என்றால் சும்மாவா? மாநிலமெங்குமிருந்து தொண்டர்களை இறக்கினர்.  மூன்று பகல், இரண்டு இரவு வரை நீடித்த இந்தப் போராட்டத்தின் பொழுது மருத்துவர்கள் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை மேற்பார்வை செய்தனர். ஒப்பனையறை வசதியுடன் கேரவன் ஒன்று பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மத்தியில் நரசிம்ம ராவ் ஆட்சி நடைபெற்றது. அவர், இந்தப் போராட்டம் தொடர்வதைப் பார்த்து  மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த வி.சி.சுக்லாவை தமிழகத்துக்கு அனுப்பி ஜெயலலிதாவின் கோரிக்கை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற செய்தியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சுக்லா வழங்கிய ஜெயலலிதா பழச்சாறு அருந்தி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

 

karunanidhi fasting



அடுத்த உண்ணாவிரதம், நாம் இன்னும் மறக்காதது. ஏனெனில் இதற்கு முன் சமீபத்தில் ஒரு தமிழக முதல்வர் நடத்திய உண்ணாவிரதம் அதுதான். ஏப்ரல் 2009ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் கொடூர தாக்குதலை எதிர்த்து, போரை உடனே நிறுத்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்கக் கோரி முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். தான் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் கலைஞர். முன்னறிவிப்பின்றி திடீரென நடைபெற்ற உண்ணாவிரதம் இது. அன்று காலை எப்போதும் போல, அறிவாலயத்திற்கு சென்று வருவது போல கிளம்பியவர் திடீரென காவலர்களிடம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறி, களத்தில் குதித்தார். பிறகு அவரை சுற்றி குடும்ப உறுப்பினர்களும் தொண்டர்களும் சூழ உண்ணாவிரதம் நடைபெற்றது. "ராஜபக்சேவின் கொலைச் செயலுக்கு நானும் பலியாகிறேன்" என்று அவர் கூறியதைக் கேட்டு பதறினர் சுற்றி இருந்தோர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அளித்த தகவல் படி, இலங்கை பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவதை கைவிட ஒத்துக்கொண்டதாகவும் அதனால் உண்ணாவிரதம் கைவிடப்படுவதாகவும் மதியமே அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் இவருக்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்பது காலம் அறிந்தது.
 

ops eps fasting 3



இதுதான் நமது முன்னாள் முதல்வர்களின் உண்ணாவிரத வரலாறு. இன்றும் மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அதிமுகவினரும் உண்ணாவிரதப் போராட்டம் செய்வதாகக் கூறினார்கள். பந்தலுக்கு வெளியே உணவு வழங்கப்பட்ட புகைப்படங்களெல்லாம் வெளிவந்திருக்கின்றன. மாலையில் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தும் கொண்டார்கள். என்ன வெற்றி கிடைத்தது, என்ன வாக்குறுதி கிடைத்தது என்று எவருக்கும் தெரியாது. ஈழத்தில் உண்ணாவிரதம் இருந்தே உயிரை விட்ட திலீபனும், மணிப்பூரில் 16 வருடங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளாவும் செய்த உண்ணாவிரதப் போராட்ட வடிவத்தை இவர்கள் கேலிக்கூத்தாகவும் கேள்விக்குறியாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.    

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.