இந்த நிலையில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில், கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தில் முதல்கட்டமாக சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற கூண்டுகள் அமைத்துள்ளனர். மேலும் தினசரி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற பெண்களை நியமித்ததுடன் தண்ணீர் குடங்களை எளிதாக எடுத்துச் செல்ல அதற்காண வண்டிகளையும் இளைஞர்கள் வாங்கி வழங்கி உள்ளனர்.
இது குறித்து குருகுலம் சிவநேசன் கூறும் போது.. தற்போது நிலடித்த நீர் பற்றாக்குறையால் மண்ணில் ஈரப்பதம் இல்லை. அதனால் மரக்கன்றுகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் உடனே காய்ந்துவிடும். அதனால் கன்றுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. ஆனால் மரக்கன்றுகளோடு ஊசி முனை அளவு ஓட்டை போடப்பட்ட மண்பானையை புதைத்து தண்ணீர் ஊற்றி வைத்தால் அந்த தண்ணீர் ஒரு வாரத்திற்கு மேல் மரக்கன்றுகளின் வேர் பகுதியில் கசிந்து 15 நாட்களுக்கு மேல் ஈரம் காக்கப்படும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து எங்கள் பள்ளி மாணவர்கள் பானை வழங்க முன்வந்தனர். அவர்களே பானைகளையும் கொண்டும் வந்தனர். அந்த பானைகளை வழங்கியதுடன் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் செய்து காட்டியுள்ளோம். இதேபோல மரக்கன்றுகள் நடப்படும் அனைத்து இடங்களிலும் பானைகளை பயன்படுத்தி கசிவு நீர் பாசனம் செய்தால் அதிகளவில் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என்றார்.