இந்த ஆண்டு தமிழக அரசு சார்பாக பொங்கல் பண்டிகைக்காக 'பொங்கல் சிறப்புத் தொகுப்பு' அறிவிக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. சில இடங்களில் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு விமர்சனங்களை திமுக அரசின் மீது முன்வைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தரமற்ற பொங்கல் தொகுப்பை வழங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை ஜூன் 10 தேதிக்கு ஒத்திவைத்தது.