கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 4-ல் உள்ள புண்ணாக்கு தெருவில் வசித்து வருபவர் சண்முகம். இவர் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளியாக சுரங்கப் பகுதியில் பணியாற்றி வருகிறார். மேலும் சி.ஐ.டி.யு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொருளாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் வீட்டின் உட்புறமாக கதவுகள் தாழ்ப்பாள் போடப்பட்டு மர்மமான முறையில் கழுத்து அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். சடலத்துக்கு அருகே கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கத்தியில் ரத்தக்கரை இல்லாத காரணத்தால், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள், நெய்வேலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.ஐ.டி.யு சங்கத்தின் பொருளாளர் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.