Skip to main content

"மண்ணையும் மக்களையும் காக்க அர்ப்பணிப்புடன் போராட முன் வர வேண்டும்"  - அன்புமணி ராமதாஸ் 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

pmk anbumani ramadoss press state for nlc farmers land issue

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

தற்போது என்.எல்.சி நிறுவனமானது புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி வட்டங்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி முயன்று வருகிறது.  இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் நிலங்களை கொடுப்போம் என அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேசமயம் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே என்.எல்.சி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை ஏவி நிலங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து  கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. என்.எல்.சியால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருக்கிறது; தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மக்கள் எதிர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே இந்த வெற்றிக்கு காரணமாகும். என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலங்களை கையகப்படுத்தித் தருவதில் கடலூர் மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அடுக்கடுக்காக துரோகங்களை செய்து வருகிறது. மக்களைக் காப்பது தான் அரசின் பணி என்ற அடிப்படைத் தத்துவத்தை மறந்து என்.எல்.சிக்கும், அதை அடுத்த சில ஆண்டுகளில் கையகப்படுத்திக் கொள்ளப் போகும் தனியார் பெரு நிறுவனத்திற்கும் ஆதரவாக, அப்பாவி உழவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அவர்களின் நிலங்களைப் பறித்து வருகிறது தமிழக அரசு.

 

தமிழக அரசின் இந்தப் போக்கையும் தமிழர்களுக்கு எதிரான என்.எல்.சி நிறுவனத்தையும் கண்டித்து தான் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 48 மணி நேர இடைவெளியில் அறிவிக்கப்பட்ட போராட்டம் தான் என்றாலும், அது இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு எவ்வகையிலும் தடையாக அமையவில்லை. காரணம் என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறல்கள், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறை, தமிழ்நாடு அரசின் துரோகம் ஆகியவற்றுக்கு ஏதேனும் ஒரு வகையில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும், வணிகர்களும் நீண்ட காலமாகவே துடித்துக் கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டத்தின் நலனுக்காக உண்மையான அக்கறையுடன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்துத் தரப்பினரும் பா.ம.க.வின் பின் திரண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

 

pmk anbumani ramadoss press state for nlc farmers land issue

தமிழ்நாட்டின் போராட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காவல்துறை தலைவர் (ஐ.ஜி), இரு காவல்துறை துணைத் தலைவர்கள் (டி.ஐ.ஜி), 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்  7 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர்கள் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டு இருந்தார்கள். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார். முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டார். அமைச்சரின் உறவினர்கள், உதவியாளர்கள், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி கடைகளை திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். கடைகளை மூடினால் வரி ஏய்ப்பு செய்ததாக பொய் வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டினர். ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் வணிகர்கள் அஞ்சவில்லை.

 

pmk anbumani ramadoss press state for nlc farmers land issue

உண்மையில், அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட அமைச்சரின் தொகுதியான குறிஞ்சிப்பாடியில் தான் முழு அடைப்பு முழுமையாக இருந்திருக்கிறது. அமைச்சரின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி, திட்டக்குடி, நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர் உட்பட கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து வணிகர்களும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்ததையே இது காட்டுகிறது.

 

கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும் கூட அவற்றில் பயணம் செய்வதற்கு பயணிகள் எவரும்  முன்வரவில்லை. அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எவ்வளவு தான் ஏவினாலும்  நியாயத்தையும், நீதியையும் மறைக்க முடியாது என்பதற்கு கடலூர் மாவட்ட முழு அடைப்பின் வெற்றியே எடுத்துக்காட்டு. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்கள் பறிக்கப்படுவதாலும் என்.எல்.சியால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் எழுச்சியையும் கொந்தளிப்பையும் அரசு அதிகாரத்தையும், அடக்குமுறையையும் கொண்டு அடக்கி வைக்க முடியாது. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து என்.எல்.சிக்காக விளைநிலங்களை பறிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்.எல்.சியின் பிடியிலிருந்து கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் மீட்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஓயாது; மேலும் தீவிரமடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

என்.எல்.சியின் சீர்கேடுகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றல்ல. அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனை ஆகும். எனவே, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஒன்று பட்டு என்.எல்.சிக்கு எதிராக போராட வேண்டும்; மண்ணையும், மக்களையும் காக்க அர்ப்பணிப்புடன் போராட முன் வர வேண்டும். கடலூர் மாவட்ட முழு அடைப்பு முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளித்த வணிகர் நல அமைப்புகள், உழவர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும், உழவர் பேரியக்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.