ADVERTISEMENT

 புதிதாக தொடங்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு!

07:52 PM Sep 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராகப் பல மாதங்களாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற தமிழ்நாடு அமைப்பு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று ஈரோட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

கடந்த மாதம் 26- ஆம் தேதி அன்று டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கிளைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உருவாக்குவது என விவசாய அமைப்புகள் முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் புதிதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் வருகின்ற செப்டம்பர் 27- ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளராக சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை வழி நடத்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் வேண்டுகோள் படி தமிழ்நாட்டிலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்திற்குத் தமிழ்நாடு அமைப்பு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்.

மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை டெல்லியில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும். உத்தரபிரேதசம் மற்றும் உத்தரகண்ட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைய வேண்டும் என்பதை அம்மாநில மக்களிடையே வலியுறுத்த உள்ளோம். கார்ப்பரேட்களின் ஆதரவாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சியும் வேளாண் சட்டங்கள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்போடு விவாதிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT