ADVERTISEMENT

உலகை அச்சுறுத்தும் புதிய புகையிலை!

11:27 PM Oct 29, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


மனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே "புதிய புகையிலை" என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ்.

ADVERTISEMENT



உலகெங்கும் வாழக்கூடிய மக்களில் 91 சதவீதத்தினர் காற்று மாசுக்கு ஆளாகின்றனர் என்றும், அவர்களில் 70 லட்சம் மக்கள் ஆண்டொன்றிற்கு உயிரிழக்கின்றனர், காற்று மாசே உலகத்தின் மிகப்பெரிய "சுற்றுச்சூழல் சுகாதார ஆபத்தாக" (environmental health risk) உள்ளது என்பதை தரவுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

இந்தியாவில் நடைபெறும் மரணங்களில் சுமார் 10.5% காற்று மாசால் நிகழ்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாட்டால் ஆஸ்துமா மட்டுமில்லாமல், நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய்"(COPd), இருதய நோய், நுரையீரல் தொற்று, மூச்சுக்குழாய், நுரையீரல் புற்றுநோய் ஆகிவற்றாலும் மரணம் நிகழ்கின்றன.



குழந்தைகள் கருவிலிருக்கும் போதே மாசுபட்ட கற்றால் பாதிப்படைய ஆரம்பித்துவிடுகின்றன, கருவில் ஆரம்பிக்கும் பிரச்சனை பிறந்து வளர்ந்துவரும் சமயங்களில் அதிகபாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த காரணத்தால்தான் உலக சுகாதார நிறுவனம் புதிதாக வெளியிடவுள்ள ஆய்வறிக்கை "காற்று மாசுபாடும் குழந்தைகளும்" என குழந்தைகள் மீது கவனப்படுத்தும் சிறப்பு அறிக்கையாக வெளிவருகிறது. "காற்றுமாசும் சுகாதார சிக்கல்களும்" என்கிற தலைப்பில் உலகத்தின் முதல் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, அதற்கு இரு தினங்களுக்கு முன்னர் "குழந்தைகளை கவனப்படுத்தும் இந்த அறிக்கை வெளிவர இருக்கிறது.


வடஇந்தியாவில் தீபாவளி ஒட்டி காற்று மாசு அதிகரிக்கும், நுரையீரல் நோயை அதிகரிக்கும் மிக நுண்ணிய துகள், PM 2.5 டெல்லியில் தேசிய சராசரியை விட 16மடங்கு கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது. PM10 துகள் சர்வதேச தரத்துடன் ஒப்பிடுகையில் 40 மடங்கு அதிகமாக இருந்தது. டெல்லியில் 38 நிகழ்நேர (real-time) கண்காணிப்பு நிலையங்களும், 10 மனிதர்கள் இயக்கக்கூடிய நிலையங்களும் உள்ளன, நாட்டின் பிறபகுதிகளில் குறைந்த அளவே கண்காணிப்பு கருவிகள் உள்ளதால் தரவுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.



கருவுற்றிருக்கும் தாய் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் பாதகமான கர்ப்ப விளைவுகளான, முன்கூட்டிய பிறப்பு (premature birth), குறைந்த இடையுடன் குழந்தை பிறப்பு, அசாதாரண குழந்தையின் நீளம், தலையின் விட்டம், வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை என அனைத்தாலும் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

வளர்ச்சியடைந்து வரக்கூடிய குழந்தைகள், வேகமாக சுவாசிப்பதாலும், அதிக நேரம் வெளியில் விளையாடுவதாலும், அவர்களுக்கு வளர்ச்சியடையும் நுரையீரல்கள் இருப்பதாலும் மேலும் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகின்றன.



காற்று மாசுபாட்டிற்கு உட்படும் குழந்தைகளின் நுரையீரல் விரைவாக செயல்படும் திறனை இழக்கிறது, அதனால் வெகுசீக்கிரமே பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன, ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நிகழ் என பல்வேறு நோய்களுக்கு குழந்தைகள் ஆளாகி அதிக நேரங்களை மருத்துவமனைகளில் செலவுசெய்கின்றன.



காற்றிலுள்ள தூசு, கார்பன் துகள்கள், நச்சுவாயுக்கள் மற்றும் ஓசோன் என் இவையனைத்தும் சூரிய வெளிச்சத்தில் வினைபுரிவதன் மூலம் நச்சுப்புகை (SMOG) உருவாகிறது, இந்த நச்சுப்புகை ஊதாக்கதிர் வகையின் "B" வகை கதிர்கள் பூமியை வந்தடைவதை தடுக்கின்றன, அதனால் குழந்தைகளுக்கு வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டு எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மனிதர்களின் தோல் 7 டீஹைடிரோசோலஸ்ட்ரோலை கொலெகால்சிபிரோல் (வைட்டமின் d ) ஆக, சூரியவெளிச்சத்தின் உதவியுடன் மாற்றினால்தான் வலுவான எலும்புகள் வளர்வதற்கும், பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் தாக்காமலும் இருக்கும்.



காற்றுமாசு நினைவாற்றல் மற்றும் "ஐக்யூ"வை பாதிக்கும் என்றும், அதுவும் பிறந்த குழந்தைகள்தான் நச்சுள்ள இந்த ரசாயனங்களால் அதிகம் பாதிப்படையும், அதுவும் குறிப்பாக பிறந்த 1000 நாட்களுக்குள் மூளை அதிகம் வளர்ச்சி பெரும் சமயங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். உளவியல் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதன் மூலம் நாள்பட்ட அல்லது தடைபட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் குழந்தைகளின் "ஐக்யூ" குறையும் என்கிறது யூனிசெபின் ஆய்வறிக்கை ஒன்று.



போக்குவரத்து ஒலிமாசும் நடத்தைமாற்றங்களை கொண்டுவரும். இரவில் அதிக ஒலிமாசு ஏற்படும் அறைகளில் குழந்தைகள் தூங்கினால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படும் அதனால் அவர்களின் ரத்த கொதிப்பு அதிகமாகும்.



மாசைக்குறைக்கும் கண்காணிப்பு ஒழுங்குமுறைகள் இந்த பிரச்சனைகளை ஓரளவிற்கு குறைக்கும். இரண்டு ஜெர்மனியும் இணைந்த பிறகு கிழக்கு ஜெர்மனியில் காற்றில் குறைந்த அளவே இருந்த "சல்பர் டை ஆக்சைடு" நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, சைனஸ், சளி ஆகியவற்றை குறைத்தது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், காற்றுமாசு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மாறிய குழந்தைகளின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டது என்றும், அவர்களுக்கு ஏற்படும் நோய்களின் தாக்கம் குறைந்தது என்றும் தெரிவிக்கின்றன.



காலநிலை மற்றம் குறித்த அறிக்கையும் தெளிவுபடுத்துகிறது, மாசுபாட்டை குறைக்கவேண்டுமென்று. பொதுப்போக்குவரத்தை அதிகரித்து, மாசைஏற்படுக்கூடிய தொழிற்சாலைகளை மூடி, அனல் மின் நிலையங்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் காற்று மாசை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்ப்பதே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் அளப்பரிய செயலாகும்.

- பூவுலகின் நண்பர்கள் குழு


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT