நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வந்தார். கணவர் முருகசந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். மூவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓய்வின்றி பல வீடுகளின் பணிப்பெண்ணாக மாரியம்மாள் உழைத்ததாகவும், தான் படிக்காத படிப்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றும் அவர் விரும்பியதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். மூன்று பெண் பிள்ளைகளின் கல்விக்காக உழைத்துக்கொண்டே இருந்த மாரியம்மாள் இன்று இல்லை என்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களுடைய தாயும் இறந்துவிட்ட நிலையில் எதிர்காலம் குறித்த பல கேள்விகளுடன் செய்வதறியாது 3 பெண் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மகளை இழந்த சோகத்தில் நிற்கதியாய் இருக்கிறார் மாரியம்மாளின் வயதான தாய்.