நெல்லை மாவட்டத்தின் திருவேங்கடம் அருகே விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள வரகனூர் கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 22 அன்று ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். அத்தனை அறைகளும் தரைமட்டமனது. அதனையடுத்து அந்தப் பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால் ஆலையின் தென்கோடியிலுள்ள பட்டாசு ஸ்டாக் இருக்கும் அறையை அவர்கள் சீல் வைக்க மறந்து விட்டனர்.
இதனிடையே அந்த ஆலைப்பக்கம் உள்ள அந்த பட்டாசு அறையை ஒட்டியுள்ள காடுகளில் கருவேல மரம் வெட்ட வந்த மாங்குடியைச் சேர்ந்த 5 பேர்கள் அந்த அறையை ஒட்டி சமையல் செய்த பின் நெருப்பை அணைக்க மறந்து விட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் அந்த அறை பக்கம் அமர்ந்து உணவு சாப்பிட ஆரம்பித்த போது காற்றில் தீப்பொறி பறந்து பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் 5 பேரும் உடல் கருகி படுகாயமடைந்தனர். அன்று மாலை கோபால் என்பவர் பலியானார். நக்கீரன் இணையதளம் ஏற்கனவே இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது.
படுகாயமடைந்த நான்கு பேர்களும் நெல்லை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.