ADVERTISEMENT

‘நாங்குநேரியில் தோழமைக் கட்சிப் பெண்ணிடம்..’ -விருதுநகர் அதிமுக வில்லங்க அரசியல்!

06:21 PM Oct 30, 2019 | santhoshb@nakk…

‘தோழமைக் கட்சி பெண்ணிடம் இப்படியா நடப்பது? நாங்குநேரியில் மறைக்கப்பட்ட விவகாரம்!’ என்னும் தலைப்பில் கடந்த 26-ஆம் தேதி நக்கீரன் இணையத்திலும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30 நக்கீரன் இதழிலும் வெளிவந்த செய்தியானது, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT

அக்கட்டுரையில் ‘இளைஞர்’ என்று பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டப்பட்டிருந்த விருதுநகர் அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் “உண்மையிலேயே நடந்தது என்னவென்றால்?” என நம்மிடம் விரிவாகப் பேசினார்.

“தோழமைக் கட்சியைச் சேர்ந்த அந்த அம்மாவின் மகளோடு நான் அப்போது பேசியதும், அதை ஒரு பிரச்சனையாக விருதுநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் விஜயகுமாரிடம் சிலர் கொண்டு சென்றதும், அவர் எனக்கு அறிவுரை கூறியதும் உண்மைதான். இன்று வரையிலும் அம்மாவும் மகளும் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மகளோ, அம்மாவோ எனக்கெதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஒன்றுமே இல்லாத இந்த விஷயத்தை விவகாரமாக்கிய பின்னணியில் ‘அரசியல்’ இருக்கிறது.” என்று பொடி வைத்துப் பேசிய அவர், மகள் மற்றும் அம்மா தன்னுடன் பேசிய ஆடியோவை நமக்கு அனுப்பினார். கண்ணனுடன் அந்த அம்மாவின் மகள் அப்படியென்ன பேசினாரென்று பார்ப்போம்!|

“ஒரு பெரிய பிரச்சனையே ஆயிருச்சு. சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”
“என்ன பிரச்சனை?”
“நீங்க என்னைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டீங்களாம். அட்வகேட் சார்கிட்ட.”
“நீங்க பண்ணுன மெசேஜெல்லாம் செல்வம் பார்த்தாரு. நான் அப்ப வேன்ல இருந்தேன். நீங்க மெசேஜ் தட்டிவிட்டுக்கிட்டே இருந்தீங்களா?”
“ஓ.பி.எஸ். பாய்ன்ட்ல வச்சி..”
“நீங்க எங்க கண்ணன் மாமாகிட்ட என்னமோ சொல்லிருக்கீங்க..”
”சரி.. விடுங்க.. உங்க ஏரியாவுல நல்லா வொர்க் பண்ணி அதிமுகவுக்கு அதிக ஓட்டு வாங்கிக்கொடுங்க.”
”நீங்கதான் எங்க கண்ணன் மாமாகிட்ட என்னமோ சொல்லிருக்கீங்க. அங்கே இருந்தவங்கள்ல எனக்குத் தெரிஞ்ச கண்ணன் நீங்க மட்டும்தான்.”
“சத்தியமா சொல்லுறேன். நான் எதுவும் சொல்லல.. கண்ணன்னா நான் மட்டுமா? ஒன்றியம் பேரு கண்ணன். இப்படி எத்தனையோ கண்ணன் அப்ப என்கூட இருந்தாங்க.”
“எங்க கண்ணன் மாமாகிட்ட நீங்கதான் சொன்னீங்கன்னு. அவங்க வீட்ல வந்து பிரச்சனை.. பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுட்டாங்க. ஆட்டோ கண்ணன்தான் எனக்கு மாமா.. அவங்கதான் சொன்னாங்க.. நீங்க சொன்னீங்கன்னு. செல்வமும் உங்க மருமகளும் ரொம்ப டீப்பா பழகுறாங்க; வைக்கிறாங்க; பேசிக்கிட்டிருக்காங்கன்னு.”
“நான் இங்கே வந்திருக்கிறது கட்சி வேலை பார்க்கிறதுக்கு. நீங்க பேசினீங்க; பழகினீங்க. பேசினோம்; வச்சோம். அவ்வளவுதான். ஒண்ணுமில்ல. முடிஞ்சிருச்சு. நான் இதை கம்ப்ளைன்டா சொல்லல. என்னைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுனாங்க. அட்வகேட் விஜயகுமார் சார் எனக்கு வெல்விஷர் மாதிரி. உங்களுக்கு ஒண்ணும் என்மேல வருத்தம் இல்லைல்ல.”
“உங்ககூட உள்ளவங்க பேசிருக்காங்க. நீங்களும் சேர்ந்து பேசிருக்கீங்க. மறுபடியும் உங்ககிட்ட இருந்து மெசேஜ் வந்திறக்கூடாதுல்ல. அதான் உங்க நம்பர பிளாக் பண்ணிட்டேன். எனக்கு யாரையுமே தெரியாது. யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணல.”

தீபாவளி முடிந்தபிறகு கண்ணனிடம் அந்த தோழமைக் கட்சியைச் சேர்ந்த அம்மா என்ன பேசினாரென்று பார்ப்போம்!

“என்ன செய்யுறது? தீபாவளி செழிப்பில்லை. யாருமே கவனிக்கல. நீங்க எல்லாருமே போயிட்டீங்க. லாஸ்ட்ல கவனிக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாரும் ஓடிட்டீங்களே. எம்.எல்.ஏ. வந்துட்டாரா இல்லியான்னு தெரியல. எம்.எல்.ஏவை போயி பார்க்கணும். நான் போயி சால்வையெல்லாம் போட்டுட்டுத்தானே வந்தேன். என்ன உதவின்னாலும் கேளுங்க. செய்யறேன்னு சொல்லிருக்காரு. எனக்கு வேற எதுவும் பண்ண வேண்டாம். இடையன்குளம் பஞ்சாயத்துல இலவச இடம் மட்டும் தரணும். எங்க வீடு வேற பஞ்சாயத்துல இருக்குல்ல.”



வேறொரு ‘சங்கதி’ குறித்து நம்மிடம் பேசிய அந்த விருதுநகர் மாவட்ட நிர்வாகி

“மேலோட்டமாகப் பார்த்தால் இவையிரண்டும் சாதாரண உரையாடல்தான். அந்த அம்மாவும் மகளும் கண்ணன் மீது ஏன் புகார் அளிக்கவில்லை தெரியுமா? அவர்களுக்குத் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. தேர்தல் பணிக்காக விருதுநகர் மாவட்டத்திலிருந்து நாங்குநேரி தொகுதிக்குச் சென்ற அதிமுகவினர் பலருக்கும் அங்கு நடந்த இன்னொரு விவகாரம் நன்றாகவே தெரியும். விருதுநகரிலிருந்து சென்ற ஆளும்கட்சிக்காரர் ஒருவர் நாங்குநேரியில் கட்சியினர் அனைவரும் தங்கிய இடத்தில் தங்கவில்லை. அந்தம்மாவின் மகளோடு நெருக்கமாகி வெளியே ஒரு இடத்தில் 10 நாட்களுக்கு மேல் தங்கினார். இதை கட்சியினர் யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்தப் பெண்ணோடு கண்ணன் செல்போனில் சாட் பண்ணியதையும், வெறுமனே பேசியதையும் பூதாகரமாக்கிவிட்டார்கள். இதற்குக் காரணம் லோக்கல் பாலிடிக்ஸ்தான்.” என்றார்.

‘அதென்ன அரசியல்?’ என்று கேட்டபோது நிலவரத்தைக் கூறினார் அந்த அதிமுக பிரமுகர்.

“விருதுநகர் டவுணில் நாடார் சமுதாயத்தினரே மெஜாரிட்டியாக உள்ளனர். 2011 வரையிலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே நகரச் செயலாளராக இருந்தார்கள். அதன்பிறகு, டி.ஆர்.பாண்டி, வாடியான் பாலன் போன்றவர்கள் கட்சியிலிருந்தே ஒதுக்கப்பட்டனர். குடைச்சலைத் தாங்கமுடியாமல், நகரச் செயலாளராக இருந்த ஆண்டவர் திமுகவிற்கு சென்றுவிட்டார். சிம்னி அசோகன் என்ற நகரச் செயலாளர் மீது ஏதேதோ கூறி கட்சியை விட்டே நீக்கினார்கள். அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நாடார் சமுதாயத்தினர் நகரச் செயலாளர் ஆவதும், ஆளும்கட்சி ஆனதும் கழற்றிவிடப்படுவதும், அசிங்கப்படுத்தி ஒதுங்கச் செய்வதும்தான் நடக்கிறது.

தற்போது விருதுநகர் அதிமுக நகரச் செயலாளராக இருக்கிறார் முகமது நயினார். இவரது வார்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பதிவான 1200 வாக்குகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 76 மட்டுமே. அதனால், பொறுப்பு பறிபோகும் நிலைக்கு ஆளானார். ஆனாலும், மா.செ.வும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ‘டிசம்பரில் என் மகனுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தவிருக்கிறேன். அதுவரையிலும் நானே பொறுப்பில் இருக்கிறேன்.’ என்று கேட்க, அவரும் சம்மதித்திருக்கிறார். இந்த நிலையில்தான், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு நகர துணைச் செயலாளர் பொறுப்பு தருவதாக பேச்சு எழுந்தது. கண்ணன் பொறுப்புக்கு வருவது தொழில் பார்ட்னர்களான நகரத்துக்கும் ஒன்றியத்துக்கும் அறவே பிடிக்கவில்லை. ஏனென்றால், ஊடகத்துறையில் மாவட்ட அளவில் பணியாற்றியதால், விருதுநகர் மாவட்டத்தில் கண்ணனைத் தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க மாட்டார்கள். அதனால்தான், நாங்குநேரி விவகாரத்தைக் கையில் எடுத்து கண்ணனின் பெயரை வெகுவாக ‘டேமேஜ்’ பண்ணிவிட்டார்கள். புதிதாக ஒருவர் கட்சியில் பெரிய பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்று காய் நகர்த்தியிருக்கிறார்கள். இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? அந்த தோழமைக் கட்சி பெண்ணின் போட்டோவை ஆளாளுக்கு தங்கள் மொபைலில் வைத்திருக்கிறார்கள்.” என்றார்.


நாம் விருதுநகர் அதிமுக நகரச் செயலாளர் முகமது நயினாரிடம் பேசினோம். “அந்த நாங்குநேரி விவகாரம் எனக்கு இப்போதுதான் தெரியும். சாதி சிந்தனை என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. கண்ணனுக்கு நகரப் பொறுப்பு தரவேண்டும் என்று சிபாரிசு செய்ததே நான்தான். நான் சரியாக கட்சி வேலை பார்க்கவில்லையென்றால் கட்சித் தலைமை நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். என் மகனுடைய திருமணம் என்பது பெர்சனல். அதை அரசியலோடு இணைத்துப் பேசுவது சரியல்ல.” என்றார்.

மொத்தத்தில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு தேர்தல் பணிக்காகச் சென்ற ஆளும்கட்சியினரில் ஒருசிலரும், தோழமைக் கட்சியினரில் ஓரிருவரும், ‘கூடுதல்’ வேலை பார்த்ததுதான் வினையாகி, சந்தி சிரிக்க வைத்திருக்கிறது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT