ADVERTISEMENT

'நேரு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்...'-ஈரோட்டில் திமுக போராட்டம்

08:08 PM Oct 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுக்க தி.மு.க.இளைஞர், மாணவர் அணிகள் சார்பாக 15 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டு வந்து பா.ஜ.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். திமுக ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ் தொடங்கி வைத்து பேசும் போது, ''60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் வலுவாக நடந்தது பலர் உயிர் தியாகம் செய்தனர். அப்போது இந்திய பிரதமர் நேரு தமிழக மக்கள் விரும்பும் வரை இந்தி புகுத்தப்படாது என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்பொழுது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு இந்தியை பல்வேறு வழிகளில் திணிக்கப் பார்க்கிறது. உதாரணத்திற்கு மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் இந்தியில் மட்டும் நடைபெறும் என்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இது நமது எதிர்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். அவர்கள் ஐஐடி, ஐஏஎம், ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழையவே முடியாது. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளும் பெற முடியாது. எனவே தான் இந்தி திணிப்பை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்த போராட்டம் நமக்கானது மட்டுமல்ல நமது சந்ததியையும் நமது தாய்மொழியையும் காக்கும் போராட்டமாகும். அதே போன்று முன்பு ராஜாஜி இருந்தபோது குலக்கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கலைஞர் ஆகியோர் மிக கடுமையாக எதிர்த்தார்கள். அதனால் அந்த திட்டம் அப்போது நிறுத்தப்பட்டது. இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கல்விக் கொள்கை மூலம் அந்த திட்டத்தை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் தமிழக மக்களுக்கு எதிரான செயலாகும். எனவேதான் புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கிறோம்'' என்றார்.

போராட்டத்தில், மதச்சார்பற்ற இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பண்டிதர் ஜவஹர்லால் நேரு கொடுத்த இந்தி எதிர்ப்புக்கு எதிரான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மத்திய அரசு புகுத்துவதை உடனே கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை பா.ஜ.க. அரசு திணிக்கக் கூடாது, மாநில மொழியை அழிக்க நினைக்கக் கூடாது, மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது, இந்தி திணிப்பின் மூலம் மற்றொரு மொழிப் போரை மக்களிடம் உருவாக்கக் கூடாது, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும், ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியை திணிக்கக் கூடாது, பொது நுழைவுத் தேர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும் என கோஷமிட்டனர்.

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தி.மு.க.வின் கொள்ளை நிலையில் உறுதியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT