தமிழ்நாடு மின்சார வாரியம், பணியாளர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் 4-ஆம் தேதி தர்ணா போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள் மின் பணியாளர்கள்.
"ஒவ்வொரு மின் வட்டங்களிலும் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் மற்றும் அலுவலர்களின் பதவிகளைப் பறிக்கக் கூடாது. துணை மின் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்புகளை முறையாக வழங்க வேண்டும். அரசாணை எண் 304 -ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் ஆகியோருக்கு மின்சார வாரியம் உரிய வகையில் போனஸ் வழங்க நடவடிக்கை வேண்டும்" என்றும் மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் 4 -ஆம் தேதி ஈரோடு ஈ.வி.என் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டனக் கோஷங்கள் எழுப்பினார்கள். பிறகு, அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் ஜோதிமணி தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.