இந்நிலையில் நடிகை நயன்தாராவின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தன் அறிக்கையின் தொடக்கத்திலேயே ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ள நயன்தாரா, ராதாரவி குறித்து, "இது போன்று பெண்களை இழிவாகப் பேசும் அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்வது, நீங்களும் ஒரு பெண்ணின் வழியாகத் தான் இந்த உலகிற்கு வந்துள்ளீர்கள். உங்களைப் போன்று பெண்களை இழிவாகப்பேசி ஆண்மையை நிலைநிறுத்துபவர்களின் குடும்பங்களில் இருக்கும் பெண்களின் துயரை நான் உணர்கிறேன். மூத்த நடிகராக இருந்து பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்போது இதுபோன்ற பேச்சுகளால் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். எனக்கு வேதனையளிப்பது என்னவெனில், இதுபோன்றவர்களின் இது போன்ற பேச்சுகளுக்கு பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ந்து ஊக்குவிப்பதே. இவர்களை ஊக்குவிப்பதை நாம் அனைவரும் நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், நடிகர் சங்கத்திடம் ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார். 'உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி பெண்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க குழு அமைப்பீர்களா? விசாகா வழிமுறைகளின்படி இந்த விஷயத்தை விசாரிப்பீர்களா?' என்ற கேட்டுள்ள நயன்தாரா, தான் தொடர்ந்து சீதாவிலிருந்து பேய் வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.