‘மசாஜ் மையங்களில் மன்மத சேவை; நிறம் மாறும் சென்னை’ என கடந்த நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் எதிரொலியாக, சென்னை கமிஷ்னர் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளர் சீனிவாசன் டீம் தீவிர விசாரணையை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் தங்கும் விடுதியில், வெளிமாநிலத்திலிருந்து பெண்களை வேலை தருவதாகக் கூறி வரவழைத்து அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த போலீசார், அங்கு இத்தொழில் நடைபெறுகிறதா என்று விசாரித்து உறுதி செய்துகொண்டு பிறகு விபச்சார தடுப்பு பிரிவு டீம் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தது.
அதில் நான்கு புரோக்கர்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பெண்கள் இரண்டு பேர், திரிபுராவைச் சேர்ந்த நான்கு பேர், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு சிறுமி என அனைவரையும் பிடித்துள்ளனர். பிடிபட்டதில் ஒருவர் சிறுமி என்பதாலும் உரிமையாளர் மற்றும் புரோக்கர் ராஜ் பிரதீப், கணேஷ், பாபு, ஹொசைன் என 4 பேர் மீது போக்சோ வழக்கும் போடப்பட்டுள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் பிடிபட்டுள்ள பெண்கள் மைலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான அலி மற்றும் இம்தாத் ஆகிய இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸ் அவர்களைத் தேடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.