இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றுமே சிறந்தது.. நகரில், சாலையோரங்களில் மருத்துவமனை வளாகங்களில் நின்ற உயிர் மரங்களை வெட்டி விற்றுவிட்டு பல லட்சங்களை செலவு செய்து செயற்கையாய் சிமெண்டால் மரங்களை உருவாக்கி நகரை அழகுபடுத்தி பார்க்கும் புதுக்கோட்டை நகராட்சியின் நிலையை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கோபம் கொள்கிறார்கள்.
ராணியார் மருத்துவமனை வளாகத்தில் பல உயிர் மரங்கள் அகற்றப்பட்டது. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை மட்டும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரங்களை நட்டு மீண்டும் புணரமைத்து வருகிறது. அதைத்தாண்டி மரங்களின் காதலர்கள் வீடு வீடாக மரக்கன்றுகளை நடுவதுடன் விழாக்களில் கன்று கொடுப்பது என்று பல்வேறு பெயர்களில் குழு குழுவாக சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றர். ஆனால் பசுமை புதுகை என்று அழகான வாக்கியத்தை வைத்து பெருமை அடித்துக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சி எங்குமே ஒரு சில மரக்கன்றுகள் கூட நட்டதில்லை.
ஆனால் பூங்கா என்ற பெயரில் புதுக்குளம் வடக்கு கரை பகுதியில் சுமார் ஒரு கோடி செலவு செய்தது. அதேபோல பெரியார் நகர் ராஜகோபாலபுரம், தண்ணீர் தொட்டி அருகில் அடப்பன் வயல், அடப்பன் குளம் அருகில் மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைத்த ஒரு சில மாதங்களுக்கு பிறகு பூங்கா இருந்த சுவடே இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் காணாமல் போனது. பல்வேறு பெயர்களில் கொடுக்கப்பட்ட அரசின் நிதி வீணடிக்கப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட காந்தி பூங்கா மட்டும் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதனையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டதால் அங்கேயும் கட்டணக் கொள்ளை. அதையும் இந்த நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
பூங்கா என்ற பெயரில் அரசின் நிதியை வீணாக்காமல் நகராட்சியின் முன்பகுதி தெற்கு 4 புதிய பேருந்து நிலையம் திலகர் திடல், மன்னர் கல்லூரி சாலை, ஆலங்குடி சாலை என நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் முறையாக மரங்களை நட்டு கூண்டுகளை அமைப்பு பராமரித்தால் புதுக்கோட்டை நகரம் பசுமை புதுகையாகவும் எதிர்கால மக்களின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதில் நிதி மோசடி செய்ய முடியாதோ என்ற நிலையில் நகராட்சி இதை கவனத்தில் கொள்ளுமா? என்கிறார்கள் நகர மக்கள்.