ADVERTISEMENT

மகளை கண்டித்த தாய்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி

10:26 AM Jun 09, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை, சின்னக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தையன். இவரது மனைவி கலாமணி. கணவன்- மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கீர்த்தனா (வயது 14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கீர்த்தனா சிங்கம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு தற்போது 10 ஆம் வகுப்பு செல்ல இருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கீர்த்தனா செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தனா வழக்கம் போல் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் மீண்டும் கீர்த்தனாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டார். இதையடுத்து தனது தாயிடம் புது செல்போன் வாங்கித் தர வேண்டும் என்று கீர்த்தனா தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி கீர்த்தனா தனது தாயிடம் மீண்டும் புதிய செல்போன் வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அவரது தாய் கீர்த்தனாவை திட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கீர்த்தனா விஷமருந்தி குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவியை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி கீர்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT