ADVERTISEMENT

காக்கிச் சட்டைக்குள் ஈரம்! முத்துலட்சுமி முகத்தில் புன்னகை!

01:01 PM Jul 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT



காவல்துறை குறித்த ‘நெகடிவ்’ தகவல்கள் மட்டுமே அதிகம் பகிரப்பட்டுவரும் நிலையில், வழக்கு ஒன்றில் அத்துறையின் ‘பாசிடிவ் அப்ரோச்’ இது -

தினுசு தினுசான மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் - கல்குறிச்சி சமத்துவபுரத்தில் வசித்துவந்த வேல்முருகனும் ஒரு தினுசானவர்தான். கார் டிரைவர் வேலை பார்த்த வேல்முருகன் கடந்த 2012-ல் முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மனைவி கர்ப்பமான நிலையில் மூன்றே மாதத்தில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ மாயமாகிவிட்டார். மகன் பிறந்தும் வீடு திரும்பாத கணவன் வேல்முருகனை பல ஊர்களிலும் தேடி நொந்துபோனார் முத்துலட்சுமி.

நான்கு வருடங்கள் கடந்த நிலையில் முத்துலட்சுமியிடம் குடும்ப நண்பர் ஒருவர் “நீயா எப்படிம்மா உன் புருஷனை கண்டுபிடிக்க முடியும்? போலீஸ்காரங்க எதுக்கு இருக்காங்க? மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேசன் போயி கம்ப்ளைண்ட் கொடு. அவங்க கண்டுபிடிச்சு கொண்டுவந்திருவாங்க.” என்று நம்பிக்கை அளித்திருக்கிறார். முத்துலட்சுமியும் கடந்த 7-6-2012 அன்று காணாமல் போன கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு 6-6-2016 அன்று புகார் கொடுத்தார். மாதங்கள், வருடங்கள் உருண்டோடின. தீவிரமாக தேடிய காவல்துறையினருக்கு வேல்முருகன் இருக்கும் இடம் தெரியவில்லை.


காவல்துறை மூலம், தனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை முத்துலட்சுமி அறிந்திடாத நிலையில் “இது என்ன மேன் மிஸ்ஸிங் கேஸ் ரெண்டு வருஷமா பெண்டிங்ல இருக்கு?” என்று மல்லாங்கிணர் போலீசாரிடம் கேட்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராசராசன், அருப்புக்கோட்டை தாலுக்கா இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடும்படி உத்தரவிட்டார். வேல்முருகனின் சொந்தக்காரர் ஒருவரிடமிருந்து பெற்ற செல்போன் நம்பரை ‘ட்ரேஸ்’ செய்த தனிப்படையினரின் விடா முயற்சிக்கு பலன் கிடைத்தது. திருப்பூர் மாவட்டம், குளத்துபாளையத்தில் வேலை பார்த்த வேல்முருகனை அழைத்துவந்து, முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

ஆறு வருடங்கள் கழித்து வேல்முருகன் கிடைத்த சந்தோஷத்தில் முத்துலட்சுமியின் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராசராசனை நன்றிப்பெருக்கோடு சந்தித்தனர். அழுகையும் ஆனந்தமும் ஒருசேரப் பொங்கிப் பெருகிட கையெடுத்துக் கும்பிட்டார் முத்துலட்சுமி. விரைப்பான காக்கிச் சட்டைக்குள்ளும் ஈரம் இருப்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது அந்தக் காட்சி!

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT