Skip to main content

எங்களது மையத்தில் தேர்வெழுதிய அத்தனை பேருமே 85 மதிப்பெண்...  எஸ்.ஐ. தேர்வில் நடந்த முறைகேடு! 

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

குரூப்-4 தேர்வில் குறிப்பிட்ட சில மையங்களை தேர்ந்தெடுத்து எழுதியவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்தது சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், "குறிப்பிட்ட மையங்களில் செல்போனைக் கொடுத்து பிட் அடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். இந்த பிரச்சனையில், நீதிமன்றம் தலையிடவேண்டும்' என போர்க்கொடி தூக்கியுள்ளனர் சமீபத்தில் எஸ்.ஐ. தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான போலீசார்.
 

si election



தாலுகா உதவி ஆய்வாளர்கள் ஆண்கள் 462, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 198 என மொத்தம் 660 பணியிடங்களும், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களில் ஆண்கள் 193, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 83 என மொத்தம் 276 பணியிடங்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உதவி ஆய்வாளர்களில் 33 ஆண்களுக்கான பணியிடங்கள், மேலும் பல பணியிடங்களை உள்ளடக்கிய 969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுத விரும்புகிறவர்கள், மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கடந்தாண்டில் அறிவித்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். இதிலும், மொத்தமுள்ள பொது ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் துறைசார் ஒதுக்கீட்டில் காவல்துறையினர் 20 சதவிகிதமுள்ள காலிப் பணியிடங்களுக்காகப் போட்டியிடலாம் எனவும் அறிவித்தது.   
 

exam



"ஜனவரி 11-ஆம் தேதி காவல்துறைக்கான ஒதுக்கீட்டிற்கான எழுத்துத் தேர்வு எனவும், பொது ஒதுக்கீடு எழுத்துத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி யிலும் தனித்தனியாக நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறைக்கான ஒதுக்கீட்டு தேதியினை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலைக் காரணம் காட்டி 13-ஆம் தேதி என ஒத்தி வைத்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்.


சென்னையைப் பொறுத்தவரை அண்ணா பல்கலையில் ஆண்களும், மதுரவாயல் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பெண்களும் எழுதுவதாகவும் அறிவித்திருந்தார்கள். தேதி மாறியதைப் போல் அத்தனைபேர்களையும் மதுரவாயல் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் எழுத வைத்தார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு பிட் பேப்பர், செல்போன் என அங்கு தடை செய்யப்பட்ட அனைத்தும் தாராளமாக புழங்கிய நிலையில் தேர்வும் முடிந்தது.

எங்களது வாட்ஸ்அப் குரூப்பில் இதைப் பற்றி ஆதங்கமாய் விசாரிக்கையில் சென்னை, திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மையங்களில் இந்த கூத்து நடந்திருக்கின்றது என்று தெரியவந்தது. 12-ஆம் தேதி எஸ்.ஐ. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு  கைக்கடிகாரம், கைபேசி சம்பந்தப்பட்ட எந்தப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால்  13-ஆம் தேதி எழுதிய காவலர்கள் தேர்வில் அனைத்துச் சலுகைகளும் இருந்துள்ளன.

பொதுப்பிரிவினருக்கான எழுத்துத் தேர்வு கடினமாக அமைந்திருந்த வேளையில், துறைசார் ஒதுக்கீட்டில் காவல்துறையினர் எழுதிய எழுத்துத் தேர்வு குறிப்பிட்ட சில மையங்களில் எழுதியவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட 170 கேள்விகளையும் எழுதி மொத்தமாக 85 மதிப்பெண்ணை பெற்று முதலிடத்திற்கு வந்துவிடுவார்கள். மற்றைய மையங்களில் தேர்வு எழுதியவர்களின் நிலை என்னாவது..? அதனால்தான் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்'' என்கிறார் சென்னையில் தேர்வெழுதிய பெண் போலீஸ் ஒருவர்.


இது இப்படியிருக்க, தென்காசியில் இயங்கிவரும் போட்டித் தேர்விற்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் ஒருவர், "நம்மஆளுக அத்தனை பேரும் 85 மார்க் எடுத்துட்டாங்க. தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரை சென்னை மையத்திற்கு மாற்றி தேர்வெழுத வைத்ததே அதற்காகத்தான்'' என போலீசார் உரையாடிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி, துறைசார் ஒதுக்கீட்டு இடங்களுக்கு எழுதிய பலரின் எதிர்காலக் கனவுகள் கேள்விக்குறியாகிவுள்ளன. அதேவேளையில், குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான விடையையும் மாற்றித் தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரோ, "எங்களது துறைசார் ஒதுக்கீட்டிற்கான தேர்வு மையத்தின் ஒரு ஹாலுக்கு ஒரு ஏட்டையா, இரண்டு ஹாலுக்கு ஒரு எஸ்.ஐ. என்ற விகிதத்தில் கண்காணிப்பாளராக வருவது அங்குள்ள காவல்நிலைய எஸ்.ஐ.க்களும், ஏட்டுக்களுமே. ஒரே ஸ்டேஷனில் பணியாற்றுவதால் கண்டிப்பாக விடைகளைப் பரிமாற உதவுவதும், கேட்டுப் பார்த்து எழுதவும் அனுமதிக்கின்றார்கள். மீறி கண்டிப்பாக நடந்து கொண்டால் ஒரே ஸ்டேஷனில் பணியாற்றுவது பின்னாளில் சிரமம் தருமே. பணத்தை வாங்கிக் கொண்டும் விடைசொல்லிக் கொடுத்தவர்களும் உண்டு.

எங்களது மையத்தில் தேர்வெழுதிய அத்தனை பேருமே 85 மதிப்பெண் பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான ஆன்ஸர் கீ கூறுகிறது. படித்த நானும் பாஸ், படிக்காமல் பிட் எழுதிய அவனும் ஒரே மதிப்பெண் என்றால் தேர்வு எதற்கு?'' என்கிறார்.

இது தொடர்பாக தேர்வு ஆணையம் டி.ஜி.பி. கரன்சிங்காவிடம் கேட்டபோது, "இது போன்ற தவறுகள் நிச்சயம் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அப்படியும் தவறுகள் நடந்திருந்தால் அந்த நிர்வாகிகள் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்''’என்கிறார்.

-நாகேந்திரன், அருண்பாண்டியன்

 

 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.