இதில் துணை முதல்வரான ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமார் 75 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை பின்னுக்கு தள்ளி கடும் இழுபறிக்கு இடையே வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக சார்பில் 38 பேர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட்டும் கூட ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை தவிர அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் கட்சியில் சீனியரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்தியலிங்கமும் மத்திய மந்திரி பதவிக்கு போட்டி போட்டு வருகிறார். இப்படி அதிமுகவில் மத்திய மந்திரி பதவிக்காக பெரும் போராட்டமே நடந்துவந்த வேலையில் ரவீந்திரநாத்க்கு கப்பல் அல்லது ரயில்வே இணை அமைச்சர் பதவி கிடைக்க போகிறது என்ற பேச்சும் அடிபட்டது.
ஏற்கனவே ரவி எம்.பி.ஆவதற்க்கு முன்பே எம்.பி. ஆகிவிட்டார் என குச்சனூர் காசி அன்னபூரணி கோவில் கல்வெட்டில் வைத்து பிரச்சனையானது அதன் பின் தற்பொழுது ஒபிஎஸ் மகனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று தெரிவதற்கு முன்பே ஒபிஎஸ் மகன் ஆதரவாளர்கள்
போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.
இந்த நிலையில் நேற்று மோடியின் மத்திய அமைச்சர வையில் இடம் பெற போகிறவர்களுக்கு மோடி தனது வீட்டில் தேநீர் விருந்து வைத்தார். அந்த விருந்துக்கு ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத் குமாருக்கும் அழைப்பு வந்ததாக கூறி ரவீந்திரநாத்குமாரும் மத்திய மந்திரி கனவில் உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டார்.
அதை கண்டு ரவி ஆதரவாளர்கள் தங்களது அதிமுக இணையத்தில் ரவியை புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அதோடு பிளக்ஸ் பேனர்களை கூட தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லி சென்ற ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரோ? இணை அமைச்சர் பதவியோ? தராமல் ஒட்டுமொத்தமாக அதிமுகவை மோடி ஓரம் கட்டி விட்டார். இதனால் ரவீந்திர நாத் குமாரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
ஆனால் டிடிவி ஆதரவாளர்களோ ரவிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்காத சந்தோஷத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையதளத்தில் ரவியை கிண்டல் அடித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.