Skip to main content

ராஜினாமா செய்ய சொன்ன அமைச்சர்கள்... எழுதிக்கொடுத்த ஓ.பி.எஸ்.!!!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து தனது மகனுக்கு அமைச்சர் பதவி பெற்றிட கடும் முயற்சி செய்தார் ஓ.பன்னீர்செல்வம். 
 

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முயற்சியை தடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஷ் கோயலின் உதவியை நாடினார்கள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டனர். அவரும் மறுத்துவிட்டார். 

 

eps



இதையடுத்து வேறுவழியின்றி ஓ.பன்னீர்செல்வத்தையே நேரில் அழைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ''நீங்கள் சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினீர்கள். பிறகு நானும் உங்களுடன் இணைந்து சசிகலா குடும்பத்தை எதிர்த்தேன். 

 

சசிகலா குடும்பத்தினரால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பகுதியில் ஏராளமாக இருந்தார்கள். அவர்களை நமக்கு ஆதரவாகப் பாதுகாத்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க துணை நின்றவர் வைத்திலிங்கம். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர். அவர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவருக்கு மத்திய மந்திரி பதவி பெற்றுத்தர விரும்புகிறேன்'' என நேரடியாகவே சொன்னார்.
 

வைத்திலிங்கம் அந்த பதவிக்கு பொருத்தமானவர். அவர் தியாகம் செய்தவர் என ஆதரவு கொடுத்தார் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார். முரண்டு பிடித்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினார்கள். 
 

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்றால் ஓ.பன்னீர்செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியையும், துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணையும்போதே அவரிடம் இருந்த ஏழு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். தற்பொழுது அவரிடம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அவர் மகனை மத்திய அமைச்சராக்கட்டும். நாங்கள் வைத்திலிங்கத்தை துணை முதல்வராக்குவோம். நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வைத்திலிங்கத்தை வெற்றி பெற வைப்போம். அவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக்குவோம் என மிரட்டல் தொனியில் பேசினார்கள்.

 

ops

 

மோடி அமைச்சரவை பதவியேற்புக்கு முந்தைய நாள் எடப்பாடி பழனிசாமி வீட்டில், ''நான் என் மகனை மத்திய மந்திரியாக்க மாட்டேன்'' என எழுதிக்கொடுத்துவிட்டுப்போனார் ஓ.பன்னீர்செல்வம். 
 

ஆனால் மே 30ஆம் தேதி டெல்லிக்கு குடும்பத்துடன் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இவர்கள் டெல்லி சென்றதும் ரவீந்திரநாத் குமார் மந்திரியாக அழைக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் பரவியது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் சென்ற அமைச்சர்கள் டெல்லியில் கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். ''அதிமுக என்ற கட்சி இருக்கணுமா? வேணமா?'' என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார்கள். 
 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, பாஜக மேலிடத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். பதவியேற்புக்கு முந்தைய கடைசி மணி நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரை ரத்து செய்தார் அமித்ஷா.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.