விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, சொக்கம்பட்டியில் வசிக்கும் கணேசன் என்பவர், தனது மைனர் வயது மகளைக் காணவில்லை என்று திருச்சுழி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சிறுமி காணாமல்போன பின்னணி இதுதான்:
சிறுமியின் தாத்தா இறந்த துக்க நிகழ்வில் இசைக்கலைஞர் என்ற முறையில் பங்கேற்றார் காரியாபட்டியைச் சேர்ந்த முனியசாமி. அப்போது சிறுமிக்கு அறிமுகமானார். 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமியுடன் முனியசாமி தொடர்ந்து பழகி வந்ததோடு அழைத்தும் சென்றுவிட, அவர் மீது அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகாரானது. போக்சோ வழக்கில் முனியசாமி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி விருதுநகர் குழந்தைகள் நல காப்பகத்தில் 25 நாட்கள் பாதுகாப்பாக இருந்தார். பிறகு கடந்த வாரம், சொக்கம்பட்டியில் உள்ள அவளது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி தன் தாயிடம் காரியாப்பட்டி சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவள் வீடு திரும்பவில்லை. முனியசாமி குடும்பத்தினர் யாரும் சிறுமியைக் கடத்திச் சென்றுவிட்டார்களா, அல்லது வேறு எங்கும் சென்றுவிட்டாளா என்ற கோணத்தில் திருச்சுழி காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.