கடந்த 13- ஆம் தேதி முதல்வரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக விழுப்புரம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், கடந்த 14- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அமைச்சருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் அமைச்சர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவ குழுவினருடன் கேட்டறிந்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர்.