ADVERTISEMENT

'மாமல்லபுரம்' மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்க இறுதி அவகாசம்! - மத்திய, மாநில அரசுகளை எச்சரித்த உயர்நீதிமன்றம்!

07:56 AM Oct 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது, பராமரிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை, நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், மாமல்லபுரம் பாதுகாப்பு, பராமரிப்பு, அழகுபடுத்துதல் ஆகியவற்றிற்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமென, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதேசமயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியிலிருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அந்தப் பகுதியை மேம்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்துள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனிதா குமாரி, நாடு முழுவதும் உள்ள 16 சுற்றுலாத் தலங்களில் மாமல்லபுரம் 14- ஆக இடம்பெற்றுள்ளது. அதன் மேம்பாட்டிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 400 பக்க அறிக்கை தயாராக உள்ளது. கரோனா பேரிடர் காலமாக இருப்பதால், நிதி ஒதுக்குவது குறித்து தகவல் ஏதும் வரவில்லை எனத் தெரிவித்தார்.

மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போத்திராஜ், மத்திய அரசு நிதி ஒதுக்குவதற்காக, காத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்திய தொல்லியல் துறை தரப்பில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவதற்கு கரோனா பேரிடரைக் காரணமாகக் கூற முடியாது எனச் சுட்டிக்காட்டினர். நிதி ஒதுக்குவது குறித்து மத்திய- மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து தெரிவிக்க இறுதி அவகாசம் வழங்குவதாகக் கூறி, 4 வார கால அவகாசம் வழங்கினர். தவறும்பட்சத்தில், மத்திய- மாநில அரசுத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை நவம்பர் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT