CHENNAI HIGH COURT RAMZAN  GOVERNMENT RICE

ரம்ஜான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்து முன்னணி அமைப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisment

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு 5,440 மெட்ரிக்டன் பச்சரிசி வழங்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாகப் பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்கக் கூடியதாக இல்லை. மாநிலம் முழுவதும் அரிசி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கியதை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்,1947-ல் பிரிவினைக்குப் பின் இந்தியாவை இந்து நாடு என அறிவிக்காமல் மதச்சார்பற்ற நாடாக அறிவித்ததால், பல வேற்றுமை இருந்தாலும், மதச்சார்பற்ற கொள்கையில் இந்தியா ஸ்திரமாக இருப்பதாகக் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினர். மேலும், மத ரீதியாகச் செயல்படும் அமைப்பின் சார்பில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசாணையை ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தனர்.

http://onelink.to/nknapp

இஸ்லாமியர்களுக்கு வழங்குவது போல அனைவருக்கும் அரிசி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக மட்டும், மே 7- ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.