ADVERTISEMENT

பைக் சாகசம்... முன்ஜாமீன் கேட்டுச் சென்ற மாணவருக்கு நூதன தண்டனை

06:17 PM Oct 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் . 19 வயதான இவர் காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இசிஇ மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதியன்று மகேஷ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள அழகப்பா அரசுக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ் ஸ்டாப்பில் ஏராளமான கல்லூரி மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த மகேஷ்வரன் அங்கிருந்த கல்லூரி மாணவிகளை கவருவதற்காக திடீரென பைக்கில் சகாசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கின் பின்புறமாக விழுந்த மகேஸ்வரனுக்கு பின்புறம் காயம் ஏற்பட்டது.

மேலும் அவர் செய்த இந்த சாகசத்தை, பின் தொடர்ந்து பைக்கில் வந்த சக மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இத்தகைய விபரீத சாகசத்தில் ஈடுபட்ட மகேஷ்வரன் மீது அழகப்பாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மாணவர் மகேஷ்வரன் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், சாகசம் செய்த இடத்திலேயே 7 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டுமென நூதன தண்டனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மகேஷ்வரன் இன்று அதே கல்லூரி முன்பு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். நீதிமன்றத்தில் இந்த தண்டனையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து மகேஷ்வரன் கூறுகையில், “இனி பைக் சாகசத்தில் ஈடுபட மாட்டேன். இதேபோல் மற்றவர்களும் பைக் சாகசம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT