N

சாலை விபத்தில் சிக்கி சிறையில் உள்ள டி.டி.எஃப்.வாசனுக்கு இரண்டாம் முறையாக நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.

Advertisment

அண்மையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற டி.டி.எஃப். வாசன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவருக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு கட்டு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்றுவிசாரணை நடத்திய நீதிபதி செம்மல் மீண்டும் மனுவை தள்ளுபடிசெய்துள்ளார்.மேலும் விபத்து நடந்த அந்த இருசக்கர வாகனம் வெளிநாட்டு வாகனமா அல்லது உள்ளூர் வாகனமா என ஆர்.டி.ஓ அறிக்கை தாக்கல் செய்த பின்பு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். இரண்டு முறை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் டிடிஎஃப் வாசனின் நண்பர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.