இன்று (26/03/2022), காவேரி மருத்துவமனையில் 2 வயதுக் குழந்தைக்கும், 4 வயதுக் குழந்தைக்கும் வெற்றிகரமாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மூலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார்.
இந்நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், “தமிழ்நாடு தொடர்ந்து நீட் விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. எல்லோருக்கும் வாய்ப்பு என்பதுதான் உண்மையான சமூக நீதி. எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு நீட் தடையாக உள்ளது. நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்வில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.அரவிந்தன், கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத் தலைவர் மருத்துவர் இளங்குமரன், மருத்துவ இயக்குநர் ஐயப்பன் பொன்னுசாமி ஆகியோர் இருந்தனர்.