ADVERTISEMENT

மீன் பிடி படகுகளில் ரூ.1526 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்திய குமரி மீனவா்கள் கைது! 

04:11 PM May 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளா மாநிலம், கொச்சியை மையமாக வைத்து கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக கடத்தல் தொழில் நடப்பது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் கடத்தல் தடுப்பு பிரிவினா் கொச்சியை ரகசியமாக கண்காணித்து வருகின்றனா்.


இந்த நிலையில் தான் சா்வதேச அளவில் கடலில் படகு மூலமாக ஹெராயின் கடத்தி வந்த கடத்தல் கும்பலை சோ்ந்த 20 பேரை ஒன்றிய அரசின் டைரக்டா் ஆப் ரெவன்யூ இண்டலிஜன்ஸ் ஏஜென்சி (டிஆா்ஐஏ) கைது செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து லட்சத்தீவு வழியாக கொச்சிக்கு ஹெராயின் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து "ஆப்ரேசன் கோஜ்பீன்" என்ற பெயரில் டிஆா்ஐஏ மற்றும் கடலோர பாதுகாப்பு படையினா் அரபிக்கடல் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.


அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் கடத்தி வந்த கப்பலில் இருந்து மூடைகளை அகத்தி தீவில் வைத்து குமரி மாவட்டம் குளச்சலை சோ்ந்த பிரின்ஸ் மற்றும் லிட்டில் ஜீசஸ் என்ற பெயா்களை கொண்ட இரண்டு மீன்பிடி படகுகளில் ஏற்றி கொச்சி கடல் எல்லையை நோக்கி அந்த படகுகள் வந்து கொண்டிருந்தபோது "ஆப்ரேசன் கோஜ்பீன்" படையினா் அந்த இரண்டு படகுகளை சுற்றி வளைத்து சோதனை செய்தனா். ஆனால், அந்த படகு மீன் பிடிக்க பயன்படுத்தியதாக தெரியவில்லை அதனைத் தொடர்ந்து முழுமையாக சோதனை செய்த போது இரண்டு படகுகளிலும் உள்ள பாதாள அறைகளில் ஹெராயின் மூடை மூடையாக பதுக்கி வைத்தியிருந்ததை கண்டு பிடித்தனா்.


மொத்தம் 220 மூடைகளில் கடத்தி வரப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ.1526 கோடியாகும். சமீபத்தில் கடத்தி வரப்பட்ட ஹெராயின் பிடிபட்டத்தில் இது தான் பெரிய மதிப்பு என்றனா் கடத்தல் தடுப்பு பிரிவினா். இதனை தொடா்ந்து அந்த இரண்டு படகுகளில் இருந்த 20 மீனவா்களை கைது செய்து கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனா். இவா்களில் 16 போ் குமரி மாவட்டம் குளச்சல், தூத்தூா், நித்திரவிளையை சோ்ந்தவா்கள் என்றும் மீதியுள்ள 4 போ் கேரளாவை சோ்ந்தவா்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT