கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அன்று கொடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை நடக்கும் முன்பே அதுகுறித்த தகவல் தெரிந்தும் விசாரணையின்போது, கனகராஜின் சகோதரர், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய இருவரும் அதை சொல்லாமல் மறைத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இருவரையும் கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.