கொடநாடு கொலை மற்றும் கொள்ளை பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பேட்டி அளித்த விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீஸ் 2 பேரையும் கைது செய்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சுமத்தினார். இது குறித்து கடந்த வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தாம் கைப்பற்ற முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார். கொடநாட்டில் கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் உடனிருந்தனர்.
அப்போது பேசிய சயான், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தமது நண்பர் என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சில முக்கிய ஆவணங்களை எடுக்க கனகராஜ் தங்களை அழைத்ததாகவும், தங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக கனகராஜ் கூறியதாகவும் தெரிவித்தார். கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் அங்கு சென்று, அவர்களில் நான்கு பேர் உள்ளே சென்றபின், கனகராஜ் சில ஆவணங்களை எடுத்ததாகவும் சயான் கூறினார்.
இதற்கிடையே, மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ், மனோஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய நேற்று டெல்லி விரைந்தது. அதேபோல், கொடநாடு வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் சயான், வயலார் ரவி ஆகியோரை கைது செய்ய மற்றொரு தனிப்படை நேற்று கேரளா சென்றது. இந்நிலையில், இன்று இரவு சயான் மற்றும் மனோஜ் இருவரையும் டெல்லியில் கைது செய்துள்ளனர்.