இந்த வழக்கில் சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் வளாகத்திலேயே இருக்கக் கூடிய மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியைப் பதிவு செய்ய வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளிக்க விலக்கு அளித்ததோடு, அந்த நடைமுறையை அவருடைய வீட்டிலேயே மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியினுடைய உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன், முகமது சபிக் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக, அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கருத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மாற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.