ADVERTISEMENT

மாணவி தற்கொலை! மன உளைச்சலில் ஆசிரியர் தற்கொலையா? 

10:38 AM Nov 25, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், காமராஜர் நகரில் வசித்துவந்தவர் சரவணன் (42). இவர், கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சரவணன் நேற்று (24.11.2021) பள்ளிக்குச் செல்லாமல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துவிட்டு, தனது மாமனார் ஊரான திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டிக்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் வந்தவர், மாலை வரை வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

இதைப்பற்றி உடனடியாக துறையூர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு (பொறுப்பு) தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கினர். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.

கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மாணவியின் இறப்பிற்கு யார் காரணம் என்று ஆசிரியர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக்கொண்டதாக தெரிகிறது. குறிப்பாக தற்கொலை செய்துகொண்ட கணித ஆசிரியரை சக ஆசிரியர்கள், “நீதான் காரணமா?” என சாடியுள்ளனர். இதனால் மனமுடைந்த கணக்கு ஆசிரியர் சரவணன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீசார், கணித ஆசிரியர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர், ‘மாணவர்கள் அனைவரும் என்னை தவறாக நினைக்கிறார்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், சரவணனின் மனைவி ‘தங்களது குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லை’ என்று காவல்துறையிடம் கூறியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், மாணவி படித்துவந்த அதே பள்ளியில் இவர் கணித ஆசிரியராக பணிபுரிந்திருப்பதால் மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT