காரைக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பிராந்தியத்தை தமிழகத்துடன் இனைத்துவிட்டால் கூட பரவாயில்லை என்கிற எண்ணம் அப்பிராந்திய மக்கள் மத்தியில் பரவலாக உருவாகிவருவதாக காரைக்கால் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போராட்டக்குழுவின் அமைப்பாளரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்," பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் 8 கொம்மியூன்கள், காரைக்காலில் ஆறு கொம்யூன்கள் இருந்தன. புதுச்சேரியில் இருந்த பிரதிநிதித்துவ சபையில் புதுச்சேரி 24, காரைக்கால் 12, மாகி இரண்டு, ஏனாம் ஒன்று, சந்திரநாகூர் ஒன்று, என 40 உறுப்பினர்கள் இருந்தனர். இந்த பிரதிநிதிகள் சபை ஆளுநருக்கு ஆலோசனைகள் மட்டுமே சொல்ல முடியுமே தவிர, முடிவுகள் எடுக்க முடியாது. கொம்யூன்களே அதிகாரம் பெற்ற அமைப்புகளாக இருந்தன. ஆளுநர் ஒவ்வொரு கொம்யூன்களுக்கும் சமமான நிதியை ஒதுக்கீடு செய்தார்.
1954ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டபோது பிரஞ்சு இந்திய உடன்படிக்கையின்படி பிரதிநிதித்துவ சபை இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டன. ஆனால் 1962 இல் பிரெஞ்சு இந்திய உடன்படிக்கைக்கு முரணாக புதுச்சேரியில் சட்டபேரவை உருவாக்கப்பட்டப்பின் கொம்யூன்களுக்கான அதிகாரம் இல்லாத நிலையே உருவானது.
காரைக்காலுக்கு அருகில் உள்ள தமிழக பகுதி மக்களுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்டங்கள் வளர்ச்சிப் பணிகளைப் பார்க்கும் போது காரைக்காலை தமிழகத்துடன் இணைத்து விடலாம் என்கிற எண்ணம் காரைக்கால் மக்களிடம் உருவாகிவருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல இதுகுறித்து புதுச்சேரி அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ளவேண்டும். புதுச்சேரி அரசு காரைக்காலை புறக்கணிப்பதில் இருந்து முற்றிலும் கைவிட்டு வளர்ச்சியில் முழு அக்கறை செலுத்த வேண்டும். அல்லது காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். இதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்,"என்றார்.