ADVERTISEMENT

மனைவியுடன் சண்டை; விஷம் குடித்தும் சாகாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்

03:42 PM Feb 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 30). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு என்பவருடன் திருமணம் ஆகி, இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். வேம்புக்கும் வெற்றிவேலுக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒன்றாம் தேதி இரவு மதுபானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்த வெற்றிவேல் தனது இறப்புக்கு காரணம் தனது மனைவி மற்றும் உறவினர்கள் தான் என்று அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி, அதை தனது செல்போனில் வீடியோவாக பேசி பதிவு செய்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிவேல் அடுத்த முயற்சியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர் குடும்பப் பிரச்சினை குறித்து எதையும் வெளியே சொல்லாமல் வெற்றிவேல் உடலை அடக்கம் செய்துவிட்டனர்.

அதன் பிறகு கடந்த 4ஆம் தேதி வெற்றிவேல் மனைவி வேம்பு, அவரது தந்தை மாரி, தாய் சோலையம்மா, சகோதரிகள் மாலா, கௌரி, அஞ்சலை, தமயந்தி, நவநீதம் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி வெற்றிவேலுக்கு சொந்தமான சொத்தை எப்படி பங்கு பிரிப்பது என்பது குறித்து பேசியுள்ளனர். அப்போது வெற்றிவேல் தந்தை வீரன், அவரது மனைவி பூங்காவனம், மகள் வள்ளியம்மை ஆகியோர் பாரபட்சமாக பேசுவதாகக் கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றிவேல் தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் காயமடைந்து, மூன்று பேரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்த தகவல் மணலூர்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், இது குறித்து வெற்றிவேல் தங்கை வள்ளி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் வேம்பு மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட உறவினர்களான செந்தில்குமார், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். வெற்றிவேல் இறப்பதற்காக எலி பேஸ்ட் சாப்பிடும் போது தனது இறப்புக்கு காரணம் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் என செல்போனில் பேசி வீடியோவாக பதிவு செய்த காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் தற்கொலை விஷயத்தை போலீசாருக்கு தெரியாமல் மறைத்ததோடு, அவரது உடலை அடக்கம் செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT