Skip to main content

தன்னோடு வாழ மறுத்த மனைவியை கொலை செய்த கணவர்; கைது செய்ய சென்ற எஸ்ஐக்கு நேர்ந்த விபரீதம்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

kallakurichi vannanjur nurse and her husband incident police involved 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மோ.வனஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா (வயது 20). இவருக்கும் தியாகதுருவம் அருகே உள்ள பல்லகச்சேகரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 25) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் விஜயா தனது தாய் வீட்டுக்குச் சென்று வசித்து வந்துள்ளார்.

 

தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு முருகன் பலமுறை சென்று விஜயாவை அழைத்துள்ளார். முருகனுடன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்ட விஜயா தாய் வீட்டிலேயே வசித்துள்ளார். அதன் பிறகும் அவ்வப்போது விஜயாவை சென்று சந்தித்த முருகன் தன் ஆசைக்காவது இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கும் விஜயா மறுத்து விட்டதாகவும் இதனால் முருகன் மிகவும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்த முருகனின் சித்தி மகன் மாயவன் என்பவருக்கும் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜயா தொடர்ந்து மாயவனுடன் சென்று தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாக முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து விஜயாவை கள்ளக்குறிச்சியில் தற்செயலாக சந்தித்த முருகன், “உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடக்கிறது. நீ அங்கு செல்லாமல் எங்கோ சென்று விட்டு வருகிறாய். எங்கே சென்றாய்” என்று கேட்டு விஜயாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயா, “உன்னுடன் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை தொந்தரவு செய்யக்கூடாது. என்னை விவாகரத்து செய்துவிடு” என்று கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த முருகன், “என்னுடன் வாழ உனக்கு பிடிக்கவில்லை. ஆனால், மாயவனுடன் மட்டும் எப்படி பழகலாம்” என்று கூறி மனைவியை கண்டித்தார். அதற்கு விஜயா, “அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் அவரை இரண்டாவதாக விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த முருகன் விஜயாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து விஜயா தனது தாயின் ஊரான வனஞ்சூருக்கு செல்ல ஏறிய பஸ்ஸில் முருகனும் ஏறி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கிய விஜயா மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை என்பதை அறிந்த முருகன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் விஜயா அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினார். அப்போதும் முருகனிடம் இருந்து விஜயா தப்பிக்க முடியவில்லை. மேலும், விஜயா உடலில் முருகன் சரமாரியாக பல இடங்களில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு முருகனை சுற்றி வளைத்தனர்.

 

இது குறித்து தகவல் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மனைவியை குத்திய ரத்தக்கறை படிந்த கத்தியுடன் நின்று கொண்டிருந்த விஜயாவின் கணவர் முருகனை பிடிக்க முயன்றார் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன். அவரையும் முருகன் கத்தியால் குத்த அவரது கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயாவின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனை கைது செய்த போலீசார் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.