ADVERTISEMENT

கலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள் முற்றுகை! அச்சத்தில் விவசாயிகள்!

07:39 PM Jun 02, 2020 | rajavel


ஆப்ரிக்கா கண்டத்தை ஒரு வழியாக்கிவிட்டு ஏமன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்திலும் கூட்டம் கூட்டமாக அப்பிய மஞ்சள் நிற வெட்டுக்கிளிப்படைகள் அங்குள்ள விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஏனெனில் பல ஆயிரம் ஹெக்டேரின் விளை பொருட்களை ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடும் தன்மை கொண்ட இவைகள் அந்த பகுதியையே உணவு பஞ்சத்தில் தள்ளி விடுகிற வல்லமை கொண்டவைகள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் நான்கு கோடி எண்ணிக்கையிலிருக்கும் இந்த வெட்டுக்கிளிகளில், பெண் வெட்டுக்கிளியின் கருப்பை 150 கருமுட்டைகளைக் கொண்டிருக்குமாம்.

இந்த கருமுட்டைகள் அனைத்தும் இரண்டு வாரத்தில் குஞ்சுகளாக மாறி அவைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் பறக்கும் தன்மை பெற்று தனியாக உணவு உண்ணுகிற பக்குவம் பெற்றுவிடும் என்றால் அதன் இனப்பெருக்கம் கற்பனையையும் தாண்டிய ஒரு சில நூறு கோடி மடங்காகிவிடும் என்று இதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். வெளிநாட்டு ஊடகங்களிலும் இது தொடர்பான தகவல்கள் வருகின்றன.


இதனிடையே தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகரித்ததாக புகார்களும் வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள கலிங்கப்பட்டியிலும் வயல் புறத்திலும் வெட்டுக்கிளிகள் முற்றுகையிட்டுள்ளன. அந்த ஊரில் காளிராஜ், மற்றும் மன்மதன் இருவருக்கும் சொந்தமான சுமார் 10 ஏக்கர் மானாவாரிக்காடு ஊரின் வடபுறத்தில் உள்ளது.

அவர்கள் இதில் விதைத்த பருத்தி சாகுபடியின் முதல் மகசூலை எடுத்து விட்டனர். அதன்பின் நிலத்தில் காய்ந்த பருத்திச் செடிகள் தற்போது பெய்த கோடை மழையினால் மீண்டும் துளிர் விட்டுள்ளது. இந்நிலையில் விவசாயி காளிராஜ் விளை நிலத்திற்குச் சென்று பார்த்தபோது செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அப்பியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.





இது குறித்து தகவலறிந்த நெல்லை வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் உதவியாளரான அசோக்குமார். வேளாண் துணை இயக்குநர்கள் நல்லமுத்து ராஜா, பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாய கல்லூரி பேராசியர் என அதிகாரிகள் போன்றவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் மறுநாள் அந்த வெட்டுக்கிளிகள் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காளிராஜ் முதல்நாள் பிடித்து வைத்திருந்த வெட்டுக்கிளிகள் மற்றும் தோட்டங்களை ஆய்வு செய்தனர். அவைகள் பச்சை நிறத்திலிருக்கின்றன. ஆய்வு செய்த கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பூச்சியியல் உதவிப் பேராசிரியர் இளஞ்செழியன், இப்பகுதியில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் வடமாநில நிலங்களை ஆட்டிப் படைக்கும் பாலைவன வெட்டுக்கிளி வகையை சார்ந்ததல்ல. மேலும் இவைகளை கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியில் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்த வகை வெட்டுக்கிளி என்று கண்டறியப்படும். இதைக்கண்டு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. இவைகளால் பயிர்களுக்குப் பெரிய பாதிப்பு வர வாய்ப்பு இல்லை என்றார். என்றாலும் வேளாண் பருவத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் பரவியிருக்கிறது விவசாயிகள் மத்தியில்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT