ADVERTISEMENT

தூத்துக்குடியில் மவுன அஞ்சலிக்கு பின் காலா திரையிடல்!

10:14 AM Jun 07, 2018 | Anonymous (not verified)


தூத்துக்குடியில் காலா திரைப்படம் வெளியான திரையரங்குகளில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் படம் திரையிடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிலும், தடியடியாலும் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி நேரில் சென்று நலம் விசாரித்து, நிதயுதவியும் வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் படமான காலா இன்று உலகம் முழுவதும் வெளியானது. அந்தவகையில், தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி ரஜினிகாந்தின் வேண்டுகோளுக்கு இணங்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏற்படாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வழக்கமாக ரஜினிகாந்தின் திரைப்படம் என்றால் தூத்துக்குடியில் ஆரவாரமாக திருவிழா போல் கொண்டாடுவோம். ஆனால் இந்தமுறை ரஜினிகாந்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமைதியாக மவுன அஞ்சலி செலுத்தி திரைப்படத்தை ஆரம்பித்துள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT