Skip to main content

தமிழ்நாட்டைப் போலவே தமிழர்கள் இங்கும் சாதிவாரியாகப் பிரிந்திருக்கிறார்கள்... - 'காலா' வசனகர்த்தா மகிழ்நன் பகிரும் தாராவி வாழ்க்கை  

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

காலா... ரஜினிகாந்த் நடித்து, ரஞ்சித் இயக்கி, தனுஷ் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டது. எப்பொழுதும் ரஜினி படங்கள், அவருக்காக மட்டுமே கவனிக்கப்படும். இந்த முறை அதையும்தாண்டி படம் பேசிய அரசியலுக்காகவும் பேசப்பட்டது. படத்தில் இருப்பது யார் பேசும் அரசியல் என்பதில் தொடங்கி நானா படேகர் பாத்திரம் யார் என்பது வரை பல விவாதங்கள் நடந்து அடங்கியிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சன்யா, ரஞ்சித்துடன் இணைந்து ‘காலா’ படத்தின் வசனங்களை எழுதியுள்ள மகிழ்நனிடம் பேசினோம். அவர், மும்பை தாராவியில் பிறந்து வளர்ந்த நெல்லைக்காரர்.
 

magizhnan



தாராவியில் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கிறது, உங்களுக்கு எப்படியிருந்தது?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தாராவியில்தான். பப்ளிக் டாய்லெட், ஓபன் டாய்லெட், மழை நேரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வருதல், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, சேர், சகதி இப்படிப்பட்ட அனுபவங்கள் கூடிய வாழ்க்கைதான் தாராவி. ஆனால் எங்கள் வாழ்க்கை ரொம்ப கொண்டாட்டமாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. எங்க வீட்டுக்குள்ள தண்ணீர் வருவதோ, இல்லை வீட்டுக்குள்ள தண்ணீர் ஒழுகுறதோ, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுறதோ எங்களுக்கு கஷ்டமாயில்ல. நாங்க மழைக்கு பயமில்லாமல் ஆடுவோம், விளையாடுவோம். அது ரொம்ப மகிழ்ச்சியான வாழ்க்கைதான். நான் படிச்சது எல்லாமே தாராவிக்கு  உள்ளேதான். 10ஆம் வகுப்பு வரை தாராவிதான் உலகம். நான் படித்த பள்ளியின் பெயர் காமராஜர் உயர்நிலை பள்ளி. அந்தப் பள்ளிக்கூடம் தாராவியில் உள்ளது. பள்ளிக்கூடம், வீடு, சின்னச் சின்ன மைதானம்... சின்ன வயதிலிருந்தே இதுதான் எங்க தாராவி. அதன் பிறகு காலேஜ் என்று வரும்போதுதான் வெளிய வந்தேன். அங்கே 11, 12 வகுப்புகளே காலேஜ் தான். அப்போதுதான் முதன்முதலாக தாராவிக்கு வெளியே உள்ள உலகத்தை அனுபவித்தோம். அதுவரைக்கும் தாராவிதான்.

 

 


சென்னைக்கு வந்து 7 வருடம் ஆனது. 'நம்மள பத்தி ஏன் யாரும் பேசமாட்டறங்க, நம்மள பத்தி பேச வேண்டும் என்றால் நாமதான் பேசணும் என்று தோன்றியது, அதனால் சினிமாவில் சேரணும்னு சென்னை வந்தேன். சென்னைக்கு வந்து பார்த்தால் ஒரு சப்ரைஸ். ‘மெட்ராஸ்’ படம் ரீலிசாகும்போது சென்னையில் இருந்தேன். ‘மெட்ராஸ்’ படம் பார்த்தபோது எனக்கு ஒரு ஆனந்தக்கண்ணீர். அந்த படம் பேசுன மொழி, அந்த படம் காண்பித்த அட்மாஸ்பியர் எல்லாம் எங்களைப் பற்றி பேசியதுபோல் இருந்தது. நம்ம நினைக்கிறத யாரோ ஒருத்தவங்க பேசிக்கிட்டு இருக்காங்க என்று தோனுச்சு. ரஞ்சித்தை சந்திக்கும் முன் கொஞ்ச நாள் பேசி இருக்கிறேன். என்றாலும் அந்தப் படம் அவர் மீதான பயங்கரமான அன்பும், ஈடுபாடும் கொடுத்தது. இப்போதும் எனக்கு தூக்கம் வரல அல்லது சோர்வாக இருந்தால் கேட்கக் கூடிய ஒரு பாட்டு ‘எங்க ஊரு மெட்ராஸ்’ பாட்டுதான். 

  with rajini



வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தாராவிக்கு 'ஸ்லம் டூர்' (slum tour) என்ற பெயரில் அழைத்து வந்து காட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னும் அது நடக்கிறதா?

ஆம், நிறைய பேரு வருவாங்க. அரைக்கால் பேண்ட் போட்டுக் கொண்டு, கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு வருவார்கள். தாராவிக்குள்ளேயே டூர். டூர் என்றால் தாராவியில் இருக்கிற இடங்களை, குடிசைகளை, வீடுகளை, கடைகளை, தெருவிலேயே வாழும் மக்களைப் பார்ப்பார்கள். அவங்க ஏன் தாராவி வருகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. இப்பொழுது புரிகிறது, எங்களைப் பார்த்து பாவம் இவர்கள் என்று நினைத்து, பேசி தங்கள் கருணை உள்ளத்துக்கு தீனி போட வரலாம். அல்லது, இப்படிப்பட்ட  சூழ்நிலையில் இவர்களே மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது நாம் ஏன் இருக்கக்கூடாது என்று சுயஆறுதல் தேடிக்கொள்வார்கள். ஆனால், நாங்கள் சொல்ல விரும்புவது, 'எங்களைப் பார்க்க வராதீர்கள், நாங்கள் கண்காட்சிப் பொருள்கள் அல்ல, இது சுற்றுலா தளம் அல்ல'.

 

 


நாட்டில் ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்று கேள்வி வந்து இந்தியாவில் இருக்கிற அமைச்சர்கள், பிரதமர் எல்லாம் தாராவிக்கு டூர் வந்தார்கள் என்றால் காரணத்தை உணர்ந்து மாற்றம் செய்தால் டூர் வருவதற்கு ஒரு அர்த்தம் இருக்கு. ஒரு சில அரசியல்வாதிகள்  இங்க வந்து பார்த்து இருப்பார்கள். ஆனால் அவர்களும் வந்து உட்கார்ந்து பேசி பழகி இருக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து கூட மிகக்குறைவாகத்தான் வந்துருக்காங்க, அதுதான் வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் பேந்தர்ஸ்போன்ற அமைப்புகள்தான் அங்க வேலை பார்த்து இருக்கிறார்கள். அதனால் டூர் வருபவர்கள் எங்களை வேடிக்கை பார்க்க வரக் கூடாது.

  tharavi



தாராவியில் தமிழர்கள் எந்தெந்தத் தொழில்களில் அதிகமாக இருக்கிறார்கள்? 

எல்லாவிதமான தொழில்களும் தாராவியில் இருக்கு. வாட்ச்க்கு பக்கில் போடுவதில் தொடங்கி லெதர் பேக், பர்ஸ் தயாரிப்பது என பல தொழில்கள். இங்க இருக்கும் திருநெல்வேலி அல்வா தொடங்கி எல்லா பொருள்களும் தாராவியில் கிடைக்கும். தமிழர்கள் அந்த எல்லா தொழில்களிலும் இருக்கிறார்கள்.

 

 


தாராவியில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அதிமாக இருக்கிறார்களே... என்ன தொடர்பு?

திருநெல்வேலியிருந்து சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான் தாராவியிலும். தாராவியை இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் எக்ஸ்டென்சன் என்று சொல்லலாம். வருஷம் முழுவதும் உழைத்து சேமித்து வைக்கிற பணத்தை ஊருக்கு வந்து அவங்க திருவிழாவில் செலவு செய்வார்கள். இப்போது இது கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் வருடாவருடம் ஊருக்கு சென்று வருகிறார்கள்.

  tharavi overview



தாராவியில் தமிழர்களின் அரசியல் ஈடுபாடு எப்படி இருக்கிறது? மக்கள் பிரதிநிநிகளாக வந்திருக்கிறார்களா?

போன தேர்தலில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அவ்வப்போது ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர். தமிழர்கள் எங்கு போனாலும் அவங்க கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் எப்படி சாதி வாரியாக பிரிந்து இருக்கிறார்களோ, அதைப் போலவே தாராவியிலும் பிரிந்து இருக்கிறார்கள். 90 ஃபீட்ல ஒரு சாதி, க்ராஸ் ரோட்ல ஒரு சாதி, கோலிவாடால ஒரு சாதின்னு இருக்காங்க. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சாதியிலிருந்தும்  நான்கு பேர் நிற்பார்கள். இருக்கிற 40 ஓட்டுகளையும் பிரித்துவிடுவார்கள். இந்த வேலையை எல்லா சாதிக்காரார்களும் செய்வார்கள். தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருப்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையாக அணி திரட்டும் முயற்சியும் சமீபமாக நடக்கிறது. அது வெற்றி பெறும் என நம்புகிறேன்.     


 

 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“இரு மொழிப் பிரச்சனை; நிச்சயமா இந்த படம் விவாதத்தை உருவாக்கும்” - பா. ரஞ்சித்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
pa.ranjith speech in gv prakash rebel movie audio launch

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.  

அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது. 

ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.