கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் நேற்று இரவு கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் பேச வந்ததால் அதிமுக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் கொடி பிடித்தபடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஜி.கே.வாசன் வருகைக்காக கூடியிருந்தனர். ஆனால் வேட்பாளர் கட்சியான பா.ம.கவை சேர்ந்த கட்சி தொண்டர்களோ, கட்சிக்கொடிகளோ வாசன் வரும் வரை அவ்விடத்தில் இல்லை. மேலும் வேட்பாளர் கோவிந்தசாமியும் அவ்விடத்திற்கு வரவில்லை அதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு ஜி.கே.வாசன் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் வந்து சிறிது நேரம் வாகனத்திற்கு உள்ளே அமர்ந்தபடி வேட்பாளர் வருகைக்காக காத்திருந்தார்.
"இந்த தேர்தலிலே ஒரு நல்ல கூட்டணியை அதிமுக ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிற பா.ஜ.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், இன்றைய இந்திய மக்களுடைய தேவை இந்தியாவுடைய நலன், பாதுகாப்பு, வளர்ச்சி, ஒற்றுமை, ஒருமைப்பாடு. நாட்டை காக்க கூடிய வல்லமை பெற்ற ஒரு அரசு இந்தியாவிற்கு தேவை. அந்தத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அரசு பாரதிய ஜனதா அரசு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. நமக்கு நாடும், நாட்டு மக்களும்தான் முக்கியம். இதைவிட முக்கியம் வேறு எதுவும் கிடையாது என்பதாலேயே ஒத்த கருத்தில் இணைந்திருக்கிறோம்.
முறியடிக்கக் கூடிய தேர்தல் தான் இந்த தேர்தல். இந்த தேர்தலிலே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை. சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் இவைகள் எல்லாம் தாண்டி மக்களுடைய வளர்ச்சியும், நலனும்தான் முக்கியம். இதன் அடிப்படையில் தான் நாடு வளரும் முன்னேறும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கூட்டணிதான் அ.தி.மு.க கூட்டணி.