Skip to main content

“திட்டமிட்டபடி நடக்கும்” - என்.எல்.சிக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரிக்கை!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Contract workers alert to NLC

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இதில் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரதப் பிரதமர் அறிவித்த, ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப்படுத்தும் வரை அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும். என்.எல்.சி  நிறுவனத்திற்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலைக்கு தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 01.06.2023 அன்று என்.எல்.சி நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த அறிவிக்கை வழங்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்று புதுச்சேரி மத்திய தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலாளர் செல்வமணி மற்றும் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் துணை மேலாளர்கள் திருக்குமரன், மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க என்.எல்.சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு தொழிலாளர் நல உதவி ஆணையர் உரிய முறையில் அழைப்பாணை வழங்கவில்லை. இதனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக பேச்சுவார்த்தையை தொடராமல் தொழிற்சங்கத்தினர் புறக்கணித்து வெளியேறினர்.

 

இது குறித்து என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறுகையில், “என்.எல்.சியில் பணியாற்றக்கூடிய 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக 50,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையாளர் எங்களுக்கும், நிர்வாகத்திற்கும் அழைப்பு கொடுத்திருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு முறையாக அழைப்பு விடுக்காதால் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

 

இதனால் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறோம். வேலை நிறுத்தம் அறிவித்துள்ள இந்த சூழலில் கூட இங்கு தமிழ் தெரியாத உதவி ஆணையாளரை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. எனவே தமிழ் தெரிந்த அதிகாரியை வைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். என்.எல்.சியால் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் துறை அதனையும் பேச்சுவார்த்தை மூலம் மழுப்பி இழுத்தடிக்க பார்க்கிறது. வருகிற 15 ஆம் தேதி என்.எல்.சியில் வேலை நிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அன்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்ட தேதியை அறிவிப்போம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.