ADVERTISEMENT

''அவருடைய மகன் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது வருத்தத்திற்குரியது''-துரைமுருகன் வேதனை!

05:18 PM Jun 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13/06/2022 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இது தொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜலசக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும்' தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக முதல்வரின் கடிதத்தை 'பொலிட்டிகள் ஸ்டண்ட்' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்திருந்தார். இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து தெரிவிக்கையில், ''நானும் பத்திரிகைகளில் பார்த்தேன் முதல்வரின் கடிதத்தை 'பொலிட்டிகள் ஸ்டண்ட்' என பொம்மை விமர்சித்துள்ளார். ஒரு மாநில முதல்வர் எழுதிய கடிதத்தை மற்றொரு மாநிலத்தை சேர்ந்த முதல்வர் இவ்வாறு கூறுவது அவருக்கு பெருமை தரக்கூடியது அல்ல. பொம்மையின் தந்தை பெரிய ஜனநாயகவாதி. அவருடைய மகன் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது வருத்தத்திற்குரியது.

வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக மேகதாதுவில் அணைகட்ட முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு உரிமைகோர முடியாது. 4.75 டிஎம்சி தேவைக்காக 67.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல. அணை குறித்த விவாதங்களில் தமிழகம் பங்கேற்கவில்லை என கர்நாடக முதல்வர் கூறியுள்ளது மிகவும் விந்தையாக உள்ளது. தமிழகம் பங்கேற்காதது குறித்து கர்நாடக முதல்வருக்கு அதிகாரிகள் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை போல. மேகதாது விவகாரத்தை அரசியலாக்கும் எண்ணமோ, அவசியமோ தமிழக அரசுக்கு இல்லை. இது தமிழக விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வுகாணும் வரை அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT