ADVERTISEMENT

டாஸ்மாக்கை மூடுவதற்கு அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி!

06:43 AM Aug 04, 2020 | rajavel

ADVERTISEMENT

சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தபோது, அப்படியானால், ஏன் டாஸ்மாக்கை மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது? என, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும், அதுபோல், ஊட்டச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும். முட்டைகள், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் கொடுக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருப்பதால், அவர்களைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று தெரிவித்தனர்.

அப்போது அரசு வழக்கறிஞர், ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும், அதில் பிரச்சனைகள் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்கவேண்டும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், சமூக இடைவெளி பிரச்சனை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அப்படியானால், டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியதுதானே? என்ற கேள்வியை முன்வைத்தனர். தொடர்ந்து, பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனால், அரசு தரப்பில் ஒரு நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதால், வழக்கு விசாரணை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT